பேசிக் கொண்டிருக்கும்போதே காதலி நெஞ்சில் ஏர் கன்னால் சுட்ட இளைஞன்.. திண்டுக்கல் அருகே ஷாக் சம்பவம்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காதலியை, காதலன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏர் கன்னால் காதலியை சுட்ட காதலன் தானும் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள துவராபதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள வெள்ளமலைப்பட்டியைச் சேர்ந்த வீரையா மகன் செல்வம் (வயது 19) என்பவர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் துவராபதியில் உள்ள உறவினரின் வீட்டில் இன்று நடைபெற்ற விசேஷ நிகழ்ச்சிக்காக வந்த செல்வம், தனது காதலியுடன், அவரது சித்தப்பா அண்ணாமலை என்பவரின் வீட்டில் வைத்து பேசிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது செல்வத்திற்கும் வேறு ஒரு பெண்ணிற்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி அந்தச் சிறுமி, காதலனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த செல்வம் அவரது சித்தப்பாவான அண்ணாமலை வீட்டில் வைத்திருந்த ஏர் கன் துப்பாக்கியால் காதலியை சுட்டுள்ளார். இதில் 17 வயது சிறுமிக்கு மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், காயம் அடைந்த சிறுமியை மீட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். காதலியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதை பார்த்த செல்வம் தானும் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரையும் சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் பின்னர் திண்டுக்கல் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் ஊரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டார். மேலும் இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலன், காதலியை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications