Dubai - Chennai Flight: துபாய் டூ சென்னை கிளம்பிய ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு.. உயிர் தப்பிய பயணிகள்
துபாய்: துபாயில் இருந்து சென்னைக்கு 172 பயணிகளுடன் ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், தொழில் நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவசர அவசரமாக விமானம் துபாய் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பீதி அடைந்தனர்.
தொடர்ந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில் நுட்ப கோளாறு சீர் செய்யும் பணியில் விமான நிலைய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கோளாறு சரி செய்த பிறகு விமானம் கிளம்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி பயணம் அமையாமல் தாமதம் ஆகியுள்ளதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தொழில்நுட்ப கோளாறு
சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் தினமும் மாலையில் துபாய்க்கு சென்றுவிட்டு மீண்டும் நள்ளிரவில் புறப்பட்டு அதிகாலை சென்னைக்கு வந்து சேரும். சென்னையில் இருந்து துபாய்க்கு வழக்கம்போல் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது.
பின்னர் துபாய் விமான நிலையத்தில் இருந்து, அந்த விமானம் சென்னைக்கு புறப்பட தயாரானது. 172 பயணிகள், 7 விமான ஊழியர்கள் உள்பட 179 பேர் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். ஓடுபாதையில் ஓடத் தொடங்கியபோது விமானத்தில் திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து விமானம் வானில் பறக்காமல் துபாய் விமான நிலையத்திலேயே அவசரமாக நிறுத்தப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு, துபாய் விமான நிலைய ஓய்வறைகளில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர் துபாய் விமான நிலைய என்ஜினீயர்கள், விமானத்தில் ஏற்பட்ட எந்திர கோளாறை பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் உடனடியாக பழுதை சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து பயணிகள் 172 பேரும் துபாயில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
விமானம் பழுதுபார்க்கப்பட்டு, தாமதமாக துபாயில் இருந்து, சென்னைக்கு புறப்பட்டு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை வரவேண்டிய பயணிகள் துபாயில் தவித்துக்கொண்டிருக்கின்றனர். விமானத்தில் ஏற்பட்ட எந்திர கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதுடன் 172 பயணிகள் உள்பட 179 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.












Click it and Unblock the Notifications