துபாய் ஈமான் அமைப்பு நடத்திய மீலாதுப் பெருவிழா.. கொண்டாட்டங்கள்
துபாய் : துபாய் ஈமான் கல்சுரல் செண்டரின் சார்பில் உத்தம நபியின் உதய தின விழா மீலாதுப் பெருவிழாவாக 19.11.2018 திங்கட்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் எனப்படும் குவைத் பள்ளிவாசலில் நடந்தது.
இந்த விழாவுக்கு ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் ஈமான் அமைப்பு செய்து வரும் சமூக நலப் பணிகள் குறித்து தெரிவித்தார். இந்த பணிகள் காரணமாக துபாய் அரசின் சமூக மேம்பாட்டுத்துறை ஈமான் அமைப்பை சிறந்த அமைப்பாக தேர்வு செய்து விருது வழங்கி கௌரவித்தது.
மேலும் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஒரே அமைப்பு ஈமான் என்பது குறிப்பிடத்தக்கது. இது தமிழர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ஆகும் என்றார். சித்தையன்கோட்டை மௌலவி முஹம்மது இறை வசனங்களை ஓதினார். பொதுச்செயலாளர் ஏ. ஹமீது யாசின் வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறப்பு தலைவர்
ஈமான் அமைப்பின் சிறப்பு விருந்தினர் சென்னை மந்தைவெளி ஈத்கா மஸ்ஜிதின் தலைமை இமாம் மௌலானா மௌலவி அல்ஹாஜ் கே.எம். இல்யாஸ் ரியாஜி சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். அவர் தனது உரையில் உலகில் இன்றளவும் போற்றக்கூடிய சிறப்பு மிகு தலைவராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்து வருகிறார்கள்.

வெற்றி
அத்தகைய தலைவரை நாம் வழிகாட்டியாக பெற்றுள்ளது நமக்கு கிடைத்துள்ள பெரும் பாக்கியமாகும். அந்த தலைவரின் பிறந்த நாளை மீலாது பெருவிழாவாக நாம் அனுசரித்து வருவதுடன் அந்த தலைவர் போதித்த கருத்துக்களை பின்பற்றி வாழ்வில் மேலும் மேலும் வெற்றிகளை பெற வேண்டும் என்றார்.

சிறப்பு விருந்தினர்
இஸ்லாம் டைரி மாத இதழின் ஆசிரியர் திண்டுக்கல் காஜா முஹைதீன், துணைத்தலைவர் முஹிப்புல் உலமா முஹம்மது மஹ்ரூப் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். ஏகத்துவ மெய்ஞான சபையின் செயலாளர் மதுக்கூர் சாகுல் ஹமீது இறை கீதங்களை பாடினார். சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சமூக நல்லிணக்கம்
ஈமான் அமைப்புக்கு விருது கிடைத்ததையடுத்து தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கானை சமூக ஆர்வலர் கல்லிடைக்குறிச்சி முஹம்மது முஹைதீன் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த ஆடிட்டர் பிரின்ஸ், ஜெபகுமார், முத்தமிழ் வளவன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது சமூக நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இருந்தது.

நிகழ்ச்சி
மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் நன்றியுரை நிகழ்த்தினார். விழாக்குழு செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் விழா நிகழ்ச்சிகளை சிறந்த முறையில் தொகுத்து வழங்கினார். விழாவுக்கான ஏற்பாடுகளை ஈமான் அமைப்பின் நிர்வாகக் குழுவினர், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் சிறப்புடன் செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications