"உயிருக்கு ஆபத்து.." ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்து.. பரபர தகவல்
துபாய்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மலையில் மோதியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து தேடுதல் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நாடு ஈரான். இஸ்லாமிய நாடான ஈரான் நாட்டின் அதிபராக உள்ளவர் இப்ராஹிம் ரைசி..

ஹெலிகாப்டர் விபத்து: இதற்கிடையே இவர் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து தரையிறங்கியதாகவும் பல்வேறு மீட்புக் குழுக்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது..
இது தொடர்பாக ஈரான் அதிகாரிகள் கூறுகையில், "இப்படி கட்டுப்பாட்டை இழந்து மோசமாகத் தரையிறங்கிய ஹெலிகாப்டரில் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் ஆகியோருடன் சில உள்ளூர் அதிகாரிகளும் இருந்துள்ளனர்" என்றார்.
என்ன நடந்தது: இதற்கிடையே இந்த விபத்து தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் அஜர்பைஜான் எல்லைக்கு அருகே சென்றுவிட்டுத் திரும்பும் வழியில் மலையில் மோதி விபத்திற்குள்ளானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மூடுபனி அதிகம் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
ஹெலிகாப்டர் விபத்தால் ரைசி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன் ஆகியோரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர்கள் நலமாக இருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறோம், ஆனால் விபத்து நடந்த இடத்திலிருந்து வரும் தகவல்கள் மிகவும் கவலைக்குரியவையாக இருக்கிறது" என்றார்.
காரணம் என்ன: மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்து இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. விபத்து நடந்த அஜர்பைஜான் மலைப் பகுதியில் மூடு பனி அதிகமாக இருப்பதால் இந்த மோசமான வானிலை மீட்புப் பணிகளைச் சிக்கலாக்குகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தைத் தொடர்ந்து ஈரான் நாட்டின் அரசு ஊடகம் அதன் வழக்கமான நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்துள்ளது.
மீட்பு பணிகள் தீவிரம்: ரைசி நலமாக இருக்க வேண்டும் என ஈரான் முழுக்க நடந்து வரும் பிரார்த்தனைகளை அந்நாட்டு ஊடகம் நேரலையில் ஒளிபரப்பி வருகிறது. மேலும், கடும் மூடுபனிக்கு மத்தியில் ஈரான் மீட்புப் படையினர் தேடுவதையும் அவர்கள் நேரலையில் ஒளிபரப்பி வருகின்றனர். அதில் மீட்பு படைகள், ஆம்புலன்ஸ்கள் அனைத்தும் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்துள்ளன.
அதேநேரம் ஈரான் அதிபர் ரைசி நலமாக இருக்கிறாரா.. அவரது உடல்நிலை என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை. மீட்பு படைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொண்டு இருப்பதாகவும் கூடுதல் தகவல்கள் சற்று நேரத்தில் வெளியிடப்படும் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சர் அகமது வாஹிடி அரசு தெரிவித்தார்.
யார் இந்த ரைசி: 63 வயதான ரைசி, கடந்த 2021இல் ஈரான் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். ஈரான் அதிபராக அவர் பதவியேற்றது முதலே கலாச்சார சட்டங்களைக் கடுமையாக்க அவர் உத்தரவிட்டார். மேலும், இவரது ஆட்சியில் தான் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications