"துபாய் இந்தியர்களுக்கு குட்நியூஸ்".. இயல்பு நிலைக்கு திரும்பிய விமான சேவைகள்.. அமீரகம் அறிவிப்பு
துபாய்: ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் மற்றும் மோதல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் நிலைமை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வந்த நிலையில் இன்று முதல் வழக்கம்போல் விமான சேவைகள் இயக்கப்படும் என்று ஐக்கிய அரபு அமீரக அரசு அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏராளமான இந்தியர்கள் உள்ளனர். அங்குள்ள அபுதாபி மற்றும் துபாய் நகரங்களில் தமிழர்கள், மலையாளிகள் உள்பட பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஏராளமாக தங்கி பணியாற்றி வருகின்றனர். இப்படியான சூழலில் இந்த அறிவிப்பு அவர்களுக்கு குட்நியூஸாக பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான போக்குவரத்து ஆணையமான ஜிசிஏஏ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இயல்புக்கு வந்த விமான சேவைகள்
''மே 2ம் (இன்று) தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. விமான நிலைய செயல்பாடு மற்றும் பாதுகாப்பு நிலைமைகளை விரிவாக மதிப்பீடு செய்த பிறகு தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்காலிகமாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டுள்ளது.
இந்த முடிவு அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் பாதுகாப்புக்கு தொடர்ந்து முன்னுரிமை கொடுக்கப்படும். அதன்படி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் கூட பாதுகாப்புக்கான சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கைகள் இருக்கும்'' என்று கூறப்படடுள்ளது.
விமான சேவை நிறுத்தப்பட்டது ஏன்?
முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் 28 ம் தேதி அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது போர் தொடுத்தது. பதிலுக்கு ஈரான் அமெரிக்காவின் நட்பு நாடுகளாக உள்ள சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மீது தாக்குதல் நடத்தியது. ஐக்கிய அரபு அமீரகத்தை எடுத்து கொண்டால் துபாய் விமான நிலையத்தை குறிவைத்து ஈரான் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.
இதனால் விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. ஐக்கிய அரபு அமீரகத்தின் வான்வெளி பரப்பு மூடப்பட்டது. இதனால் அங்கிருந்தும் வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் விமான சேவைகள் தடைப்பட்டது.
இந்தியர்களுக்கு குட்நியூஸ்
இதனால் போருக்கு நடுவேயும் கூட அங்கிருக்கும் மக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். தற்போது விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதால் அங்குள்ள இந்தியர்கள் உள்பட அனைத்து மக்களும் ஹேப்பியாகி உள்ளனர்.
அமெரிக்கா - ஈரான் பதற்றத்துக்கு நடுவே..
இருப்பினும் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறது. ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் போர் நடவடிக்கை முடிவடைந்தாலும் கூட இன்னும் மோதல் நீடித்து வருகிறது. குறிப்பாக அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்பது தொடர்பாக ஈரானுடன் அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொள்ள முயன்று வருகிறது. ஆனால் ஈரான் பிடிகொடுக்கவில்லை.
அமெரிக்கா- ஈரான் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. 2வது கட்ட பேச்சுவார்த்தைக்கு ஈரான் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் இருநாடுகள் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் மீண்டும் அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் தாக்குதல் நடக்கலாம் என சொல்லப்படும் நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் மீண்டும் விமான சேவையை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளது.















Click it and Unblock the Notifications