30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு
துபாய்: இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் ஐக்கிய அரபு அமீரகத்தை தாக்கி வருகிறது. இதற்கிடையே தான் தற்போது பாகிஸ்தானிடம் ரூ.32,459 கோடியை உடனடியாக தரும்படி கெடு விதித்துள்ளது. இதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதனால் பிற நட்பு நாடுகள், உலக வங்கி உள்பட சர்வதேச அமைப்புகளிடம் இருந்து கடன் வாங்கி குவித்து வைத்துள்ளது. அந்த வகையில் அரபு நாடுகள், சீனா, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பாகிஸ்தான் அதிகளவில் கடன் வாங்கியுள்ளது.

சமீபத்தில் கூட பாகிஸ்தானின் அந்நிய செலவாணி கையிருப்பை அதிகப்படுத்தி 7 பில்லியன் டாலர் மதிப்பிலான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தின் கீழ் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, சீனா ஆகிய நாடுகள் பாகிஸ்தான் மத்திய வங்கியில் 2027 செப்டம்பர் மாதம் வரை 12.5 பில்லியன் டாலர் அளவுக்கு வைப்புத்தொகை வைக்க ஒப்புக்கொண்டது.
ஐக்கிய அரபு அமீரகம் கெடு
இந்நிலையில் தான் தற்போது பாகிஸ்தானுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஐக்கிய அரபு அமீரகம் விதித்த கெடு தான் முக்கிய காரணமாகும். அதாவது பாகிஸ்தான் தான் வாங்கிய 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில்ரூ.32,459 கோடி) கடனை ஏப்ரல் மாதம் இறுதிக்குள் செலுத்த வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகம் கெடு விதித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 11ம் தேதி 450 மில்லியன் டாலர், ஏப்ரல் 17 ம் தேதி 2 பில்லியன் டாலர், ஏப்ரல் 23ம் தேதி 1 பில்லியன் டாலர் என்று மொத்தமாக 3.5 பில்லியன் டாலர் கடனை தர வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
30 ஆண்டு கடன் தொகை
இதில் 450 மில்லியன் டாலர் கடன் என்பது பாகிஸ்தானால் 1996-97 ம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்திடம் பெறப்பட்டது. 30 ஆண்டுகளாக இந்த கடன் வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அது தீர்க்கப்பட உள்ளது. அதன்பிறகு பல்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்ட கடன்களையும் இப்போது பாகிஸ்தானால் திரும்ப வழங்கப்பட உள்ளது.
பாகிஸ்தானுக்கு சிக்கல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போருக்கு நடுவே ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தானிடம் இந்த பணத்தை கேட்டுள்ளது. பாகிஸ்தானில் தற்போதும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இப்படியான சூழலில் தான் ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த உத்தரவு என்பது பாகிஸ்தான் தலையில் இடியை இறக்கி உள்ளது.
அந்நிய செலாவணியில் கைவைக்க முடிவு
இதனால் பாகிஸ்தான் தனது மத்திய வங்கியின் அந்நிய செலவாணி கையிருப்பில் இருந்து எடுத்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வழங்கலாம் என்று கூறப்படுகிறது. பிற நாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்றால் அந்நிய செலாவணி கையிருப்பு மிகவும் அவசியம். இதனால் பாகிஸ்தான் எதிர்காலத்தில் இன்னும் மோசமான நிலைமையை சந்திக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications