துபாயில் பறவைக் கூண்டில் அடைத்து இந்தியர்கள் சித்ரவதை.. வெளியான வைரல் வீடியோ
Recommended Video
துபாய்: ஐக்கிய அரபு அமீரகம் கால்பந்து அணிக்கு ஆதரவு அளிக்கக் கோரி இந்திய ரசிகர்களை பறவைகள் கூண்டில் அடைத்து கொடுமைப்படுத்திய அரபு நாட்டு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அபுதாபியில் ஆசியக் கோப்பை கால்பந்துப் போட்டி நடந்து வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம் அணியுடனான போட்டி ஒன்றில் இந்திய அணி வென்றது. ஆனால் அந்த போட்டிக்கு முன்னதாக இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது.
விவரம் இதுதான்.. அந்த போட்டிக்கு முன்பாக, அரபு நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆசிய நாட்டைச் சேர்ந்த இந்தியர்கள் உள்ளிட்ட சிலரை ஒரு பறவைக் கூண்டுக்குள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துகிறார். அதில், அந்த அரபு நாட்டவர்.. இன்று நடக்கும் கால்பந்துப் போட்டிக்கு எந்த அணிக்கு ஆதரவு தெரிவிப்பீர்கள் என்று கேட்கிறார்.
இந்தியர்களை அடித்த அரபு நாட்டவர்
அதற்கு கூண்டுக்குள் இருக்கும் மக்கள், இந்திய அணிக்கு என்று தெரிவிக்கின்றனர்.உடனே அந்த நபர் தமது கையில் இருக்கும் பிரம்பால் அடித்து, அரபு அணிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கூறுகிறார்.
|
வெளியான வீடியோ
இந்த வீடியோ எப்படியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த மனிதரின் செயலுக்கு கடும் கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்தன. இதையடுத்து, இந்த விவகாரம், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவர்கள் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் தூதரகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
வெளியான அறிக்கை
இதையடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:ஆசிய நாட்டவர்கள் பலரை ஒரு அரபு நாட்டவர் பறவைக் கூண்டில் அடைத்து வைத்து அடிக்கும் வீடியோவைப் பார்த்தோம். கூண்டில் அடைக்கப்பட்டவர்கள் யுஏஇ கால்பந்து அணிக்கு ஆதரவு அளிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
தொழிலாளர்களிடம் நகைச்சுவை
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு தலைமை அலுவலகத்திடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அரபு நாட்டவரையும் விசாரணை செய்ததில், அவர்கள் அனைவரும் தன்னிடம் பணியாற்றும் ஊழியர்கள் என்றும் நகைச்சுவைக்காக இதுபோல் செய்ததாகவும் தெரிவித்தார்.
சமத்துவம், தகுதி
ஆனால், ஐக்கிய அரபு அமீரக அரசு ஒருபோதும் பாகுபாட்டையும், வேறுபடுத்துதலையும் அரசு பொறுக்காது. அனைவருக்கும் சமத்துவம், தகுதி ஆகியவற்றில் அரசு நம்பிக்கை வைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக அந்த அரபு நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறையும், 20 லட்சம் திர்ஹாம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.