பதற்றத்தை குறைக்க ஓமன் முயற்சி.. முக்கிய பேச்சுவார்த்தையில் ஈரான், அமெரிக்க அதிகாரிகள்!
துபாய்: அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நடைபெறும் கடும் பதற்றத்தை தணிக்க, ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையிலான குழு பங்கேற்று இருக்கிறது. அதேபோல அமெரிக்காவின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் தலைமையிலான குழு பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருக்கிறது.

2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஈரான் மீது இஸ்ரேல் 12 நாட்கள் போர் நடத்தியது. அப்போது அமெரிக்காவும் ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் அணுசக்தி திறன் மற்றும் வான் பாதுகாப்புகள் கடுமையாக சேதமடைந்தன.
அதேபோல ஈரானில் கடந்த மாதம் நடைபெற்ற மிகப்பெரிய மக்கள் போராட்டங்கள் மற்றும் அதனை அரசு ஒடுக்கிய விதம் அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை பலவீனப்படுத்தியுள்ளது.
இப்படி இருக்கையில், அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஈரானை நோக்கி சக்தி வாய்ந்த போர்க்கப்பல்களை அனுப்பி உள்ளதோடு, நேரம் முடிந்து கொண்டிருக்கிறது என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இந்த சூழலில்தான் போர் ஏற்படுவதை தவிர்க்கவே இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
பேச்சுவார்த்தையில், அணுசக்தி விவகாரம் மற்றும் பொருளாதார தடைகளை நீக்குவது குறித்து பேசப்பட இருக்கிறது. ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டும் பணியை மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும். ஏற்கனவே செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாட்டிற்கு அனுப்பி விட வேண்டும். அதற்கு பதிலாக பொருளாதார தடைகளில் சில தகவல்களை அமெரிக்கா கொடுக்கும்.
இதை ஈரான் ஒப்புக் கொள்ளுமா அல்லது எதிர்க்குமா என்பதே தற்போதைய கேள்வியாக இருக்கிறது. இன்று நடக்கும் பேச்சுவார்த்தையில் சில முடிவுகள் எட்டப்பட வாய்ப்பு இருப்பதால், சர்வதேச அளவில் இந்த பேச்சுவார்த்தை மீது எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications