அனிதா இப்போது உயிரோடு இருந்திருந்தால் டாக்டராகியிருப்பார்.. உதயநிதி ஸ்டாலின் பேச்சு
ஈரோடு: நீட் தேர்வு என்பது திமுக பிரச்சனையா இல்லை தனிப்பட்ட எனது பிரச்சனையா என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அது மாணவர்கள் பிரச்சனை, மக்கள் பிரச்சனை என்பதால் தான் தாங்கள் தொடர்ந்து நீட்டை எதிர்த்து வருவதாக தெரிவித்துள்ளார்.
சேலத்தில் வரும் டிசம்பர் 17ஆம் தேதி திமுக இளைஞரணி மாநாடு நடைபெறுவதை ஒட்டி தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் சென்று மாவட்ட வாரியாக இளைஞரணி நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அந்த வகையில் ஈரோட்டிற்கு சென்றுள்ள அவர் அங்கு திமுக இளைஞரணி நிர்வாகிகள் மத்தியில் பேசிய போது நீட்டை ஏன் எதிர்க்கிறோம் என உருக்கமுடன் காரணம் கூறினார்.

6 ஆண்டுகளுக்கு முன்பு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண்கள் பெற்ற அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா, நீட் தேர்வால் தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் அனிதா மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால் அவர் மருத்துவர் அனிதாவாக ஆகியிருப்பார் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். அனிதாவில் ஆரம்பித்து அண்மையில் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜெகதீஷ் என்ற மாணவன் வரை கடந்த 6 ஆண்டுகளில் 22 தமிழக மாணவர், மாணவிகளை காவு வாங்கிய தேர்வு நீட் தேர்வு என வேதனையை வெளிப்படுத்தினார்.
நீட் தேர்வு என்பது திமுக பிரச்சனையா இல்லை தனிப்பட்ட எனது பிரச்சனையா என்று கேள்வி எழுப்பிய அவர் அது மாணவர்கள் பிரச்சனை என்பதால் தான் திமுக அதனை தமிழகத்திலிருந்து விரட்டி அடிக்க போராடி வருவதாக தெரிவித்தார். நீட் தேர்வு வந்தால் மாணவர்கள் லட்சம் லட்சமாக கட்டணங்கள் செலுத்தத் தேவையில்லை என்று கூறினார்கள் ஆனால் இன்று நீட் தேர்வு பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் கட்டணங்களை வசூலிக்கிறார்கள் எனவும் சாடினார்.
இதனால் தான் நீட் விலக்கு நம் இலக்கு என்ற முழக்கத்துடன் 50 லட்சம் கையெழுத்துக்கள் திமுக இளைஞரணி சார்பில் வாங்கப்பட்டு வருவதாகவும் வரும் டிசம்பர் 17ஆம் தேதி இதனை சேலம் மாநாட்டு மேடையில் முதல்வர் ஸ்டாலின் கையில் ஒப்படைத்து அவர் மூலமாக குடியரசுத் தலைவரிடம் ஒப்படைப்போம் எனத் தெரிவித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications