நடுவானில் ஹெலிகாப்டரில் சிக்னல் கோளாறு.. பைலட் சாமர்த்தியத்தால் நடந்த ட்விஸ்ட்- திக் திக் நிமிடங்கள்
ஈரோடு: பெங்களூருவில் இருந்து கொச்சி செல்வதற்காக சென்ற தனியார் ஹெலிகாப்டர் ஒன்று மோசமான வானிலை காரணமாக சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியில் தரையிறக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஏற்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்துல் அதில் பயணித்த ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் வீரமரணம் அடைந்தனர். அப்போதிலிருந்து வானில் ஹெலிகாப்டர் பறந்து சென்றாலே அதனை மக்கள் ஆர்வத்துடனும் ஒருவித பயத்துடன் நோக்கும் நிலை உள்ளது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மோசமான வானிலை காரணமாக தனியார் வாடகை ஹெலிகாப்டர் ஒன்று சிக்னல் கோளாறு காரணமாக விவசாய நிலத்தில் இறக்கப்பட்ட சம்பவம் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாடகை ஹெலிகாப்டர் சேவை
இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் ஹெலிகாப்டர் வாடகை சேவையை வழக்கு வருகின்றன. திருமணம், அவசர பயணங்கள் மற்றும் ஏர் ஆம்புலன்ஸ் எனப்படும் மருத்துவ உதவிகளுக்காகவும் குறிப்பிட்ட கட்டணத்தில் இந்த சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் பாரத். இவரது மனைவி ஷீலாவுக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் கேரள மாநிலம் செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

கொச்சி சென்ற ஹெலிகாப்டர்
இதையடுத்து கொச்சியில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதற்காக இன்று காலை பெங்களூருவில் இருந்து தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த வாடகை ஹெலிகாப்டர் மூலம் பாரத், ஷீலா ஆகியோர் கேரளாவிற்கு புறப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டரை பைலட் கர்னல் ஜஸ்பால் இயக்கினார். உடன் பொறியாளர் ஹேங்கட் சிங் உடன் இருந்தார்.

சிக்னல் கோளாறு
ஹெலிகாப்டர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பனிமூட்டம் மற்றும் மோசமான வானிலை காரணமாக சரிவர சிக்னல் கிடைக்காத காரணத்தினால் பைலட் ஜஸ்பால் கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள அத்தியூர் என்ற கிராமத்தில் பெருமாள் அம்மாள் என்பவரது விவசாய நிலத்தில் ஹெலிகாப்டரை தரை இறக்கினார். ஹெலிகாப்டர் விவசாய விளை நிலத்தில் தரையிறங்குவதை கண்ட மலை கிராம மக்கள் திடீரென அதிர்ச்சி அடைந்தனர்.

திடீர் பரபரப்பு
கிராம மக்கள் அச்சமடைந்து உடனடியாக அருகே சென்று பார்த்தபோது ஹெலிகாப்டரில் வந்த பைலட் உள்ளிட்ட நான்கு பேரும் பத்திரமாக ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கடம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஹெலிகாப்டர் தரையிறங்கியது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடம்பூர் மலைப்பகுதியில் திடீரென ஹெலிகாப்டர் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications