கஞ்சா சாக்லேட்.. பாக்கெட் பாக்கெட்டாக சப்ளை.. ஈரோட்டில் இனிப்புக் கடை உரிமையாளர் கைது!
ஈரோடு: ஈரோட்டில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த கடை உரிமையாளர் மதுவிலக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப் பொருள் புழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் கடந்த சில மாதங்களாக தொடர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஈரோட்டில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிகளில் மதுவிலக்கு போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஈரோடு மாதவ கிருஷ்ணா வீதியில் ஒருவர் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
ஈரோடு மாதவ கிருஷ்ணா வீதியில் இனிப்பு கடை ஒன்றில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த அந்தக் கடையின் உரிமையாளர் பஹதூர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பஹதூரிடம் இருந்து ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள கஞ்சா சாக்லேட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஈரோட்டில் கஞ்சா சாக்லேட் விற்றவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா சாக்லேட் விற்பனையின் பின்னணியில் யார் யார் உள்ளனர் என்பது குறித்து காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications