விஜய் கூட்டத்துக்கு அனுமதி மறுத்த போலீசார்.. மாற்று இடம் தேர்வு செய்வதில் செங்கோட்டையன் முழுவீச்சு!
ஈரோடு: ஈரோட்டில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள தவெகவினர் கோரிய இடத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து வேறொரு இடத்தை தேர்வு செய்து எஸ்.பி அலுவலகத்தில் மீண்டும் மனு அளிக்கப்பட்டுள்ளது. தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், ஈரோட்டில் விஜய் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவத்தை அடுத்து தவெக தலைவர் விஜய் கடந்த சில மாதங்களாக அரசியல் பிரச்சார பயணம் மேற்கொள்ளாமல் இருந்து வந்தார். கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு, கடந்த நவம்பர் 23 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட மக்களை அவர் சந்தித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் கல்லூரியின் உள்அரங்கில் வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட 2000 பேரை அவர் சந்தித்து பேசினார். காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பை அடுத்து, மீண்டும் பரப்புரையை தொடங்கியுள்ள விஜய் இந்த வாரம் புதுச்சேரியில் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் வரும் 16 ஆம் தேதி தமது பரப்புரையை மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் செல்வாக்குடன் திகழ்ந்து வரும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலகி கடந்த நவம்பர் 27 ஆம் தேதி விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். அவருக்கு உடனடியாக தவெக மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்புச் செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த கையோடு, அக்கட்சியின் தலைவர் விஜய் ஈரோடு மாவட்டத்தில் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பரப்புரைக்கு அனுமதி கோரி தவெக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், "தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஈரோடு மாவட்டத்தில் வருகின்ற 16 ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த சுற்றுப்பயணத்திற்கு பெருந்துறை சாலை அருகே தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்குரிய அனுமதி கிடைத்தவுடன் பரப்புரைக்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும்.
வெற்றிகரமாக இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள உள்ளோம். தனியார் இடத்தை தேர்வு செய்து நடைபெற உள்ள இந்த நிகழ்வில் ரோடு ஷோ தவிர்க்கப்பட உள்ளது. அரசு விதிமுறைகளுக்கேற்ப விஜய்யின் பரப்புரையில் பொதுமக்கள் கலந்துகொள்வார்கள். எதிர்கால தமிழகத்தை உருவாக்குவதற்கு மக்கள் சக்தி அவரை அரியணையில் அமர்த்தும்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, விஜய் பொதுக்கூட்டத்துக்கு ஈரோடு பெருந்துறை சாலையில் பவளத்தாம்பாளையம் வாரி மகால் அருகே உள்ள 7 ஏக்கர் காலி இடத்தை எஸ்.பி சுஜாதா தலைமையிலான போலீசார் ஆய்வு செய்தனர். 75,000 பேர் பங்கேற்பார்கள் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு இடப் பற்றாக்குறை காரணமாக அங்கு அனுமதி மறுத்த போலீசார் மாற்று இடத்தை தேர்வு செய்யும்படி அறிவுறுத்தினர்.
இதையடுத்து பெருந்துறை அருகே மாற்று இடத்தை தேர்வு செய்ய செங்கோட்டையன், த.வெ.க. நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து தேர்வு செய்த மாற்று இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு ஈரோடு மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் தவெக சார்பில் மீண்டும் மனு அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications