ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. திடீரென இரும்பு பட்டறையில் புகுந்த ஆர்பி உதயகுமார்.. ஆச்சரியமான மக்கள்!
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்காக இரும்படித்து ஆர்பி உதயகுமார் வாக்கு சேகரித்தார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இபிஎஸ் அறிவித்த அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக ஆர்பி உதயகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது திடீரென இரும்பு பட்டறைக்குள் புகுந்து, தொழிலாளர்களுடன் சேர்ந்து இரும்படித்து வாக்கு சேகரிப்பது மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிப்.27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல் அமமுக சார்பாக சிவ பிரசாந்த், தேமுதிக சார்பாக ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா உள்ளிட்ட வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக வேட்பாளர் தென்னரசு?
அதுமட்டுமல்லாமல் அதிமுகவின் இரு அணிகளின் சார்பாக ஒரே வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் தரப்பு வேட்பாளருக்கான தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மெகா தேர்தல் பணிக்குழு
அதேபோல் அதிமுக தரப்பில் நியமிக்கப்பட்ட மெகா தேர்தல் பணிக்குழுவின் வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னதாகவே களப்பணியை தொடங்கியுள்ளது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் பிரச்சார யுக்தியை அமைத்து வருகின்றனர்.

திண்ணை பிரச்சாரம்
வேட்பாளர் தேர்வில் தாமதமானாலும் பிரச்சாரத்தில் தாமதமாகிவிடக் கூடாது என்று அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அதேபோல் மக்களின் வாக்குகளை கவர்வதற்காக வீடு வீடாக சென்று திண்ணை பிரச்சாரமும் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் மற்றொரு முயற்சியாக உழைக்கும் மக்கள் பணியாற்றும் இடங்களுக்கு சென்று அவர்களுடன் பணியாற்றி வாக்கு சேகரிக்கப்பட்டு வருகிறது.

இரும்படித்த ஆர்பி உதயகுமார்
அதன் ஒரு பகுதியாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வாக்கு சேகரித்த திடீரென அப்பகுதியில் இருந்த இரும்பு பட்டறைக்குள் புகுந்தார். அங்கிருந்த தொழிலாளரிடம் இருந்து சுத்தியலை வாங்கிய ஆர்பி உதயகுமார், இரும்படித்து தொழிலாளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் இரும்படித்த காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications