"தீயாய் வேலை பார்க்கனும் குமாரு" இந்த நேரத்துல இதை கேட்குறீங்களே.. பரபரக்கும் செல்லூர் ராஜூ!
ஈரோடு கிழக்கு தொகுதியில் காலை நடைபயிற்சியின் போதே செல்லூர் ராஜூ வாக்கு சேகரித்தார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கடைசி நாள் பிரச்சாரம் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நடைபயிற்சி மேற்கொள்ளும் போதே மக்களிடம் வாக்கு சேகரித்தார். அதேபோல் நாளை மறுநாள் நடக்க உள்ள வாக்குப்பதிவில் அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் காத்திருப்பதாக செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில், அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைகிறது.
இதனால் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.

அதிகாலையே பிரச்சாரம்
அதேபோல் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளும் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ காலை நடைபயிற்சி மேற்கொண்ட போதே வாக்கு சேகரிக்க தொடங்கினார். ஈரோடு பழைய பேருந்து நிலையம் அருகே பிரச்சாரம் மேற்கொண்டார்.

மக்களுக்கு விடுதலை
காலையிலேயே வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தது அக்கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து செல்லூர் ராஜூ கூறுகையில், இன்று இறுதிக்கட்ட, உச்சக்கட்ட பிரச்சாரம். மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதற்கு காரணம், நாளை முதல் மக்களை அழைத்து சென்று அடைத்து வைக்க முடியாது. நாளை முதல் ஈரோடு மக்களுக்கு விடுதலை. மக்கள் அனைவரும் அதிமுகவுக்கு வாக்கு அளிப்பதற்காக காத்திருக்கிறார்கள்.

தீயாய் வேலை செய்யும் நேரம்
எங்களை பிள்ளைகளை போல் மக்கள் வரவேற்கிறார்கள் என்று தெரிவித்தார். அதிமுக பற்றிய டிடிவி தினகரனின் கருத்து குறித்த கேள்விக்கு, டிடிவி தினகரன் தனிக்கட்சித் தொடங்கி பயணித்து வருகிறார். அதனால் அதிமுக வளர்ந்துவிடும் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். தீயாய் வேலை செய்ய வேண்டிய நேரத்தில் இதுகுறித்து கேட்கிறீர்கள். இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் மற்ற கட்சிகளின் கருத்துகள் பற்றி எதுவும் பேச முடியாது என்று கூறினார்.

அதிமுகவுக்கு வெற்றி
பின்னர், இதுவரை நாங்கள் பார்த்த வரையில், இதுபோல் தேர்தல் ஆணையம் கண்ணை மூடிக் கொண்டு இருந்ததில்லை. மாவட்ட ஆட்சித் தலைவரும் அமைதியாக இருக்கிறார். உள்ளாட்சித் தேர்தல் போல் அதிகாரிகள் அமைதியாக இருக்கிறார்கள். ஆளுங்கட்சியினர் அதிகளவில் மக்களை அடைத்து வைக்கிறார்கள். அதனால் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நாளை மறுநாள் நடக்கவுள்ள வாக்குப்பதிவில் அதிமுகவுக்கு வாக்களிக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் மனநிலையை பார்க்கும் போது அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசு வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கிறேன்.












Click it and Unblock the Notifications