சுவையான மாங்காய் தான் கல்லடி படும்.. விமர்சனங்களுக்கு பயப்படுற ஆள் நான் கிடையாது.. அண்ணாமலை பேட்டி!
ஈரோடு: சுவையான மாங்காய் தான் கல்லடி படும். கல்லடி பட்டுத் தான் அந்த மாங்காய் மரம் மக்களுக்கு மாம்பழத்தை கொடுக்கும். அதே போல் நான் விமர்சனத்திற்கு அஞ்சுபவன் கிடையாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சட்டமன்றத் தொகுதி வாரியாக பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் அண்ணாமலையின் பாதயாத்திரை நேற்று நடைபெற்றது. நடைபயணத்தின் போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார் அண்ணாமலை.

செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "எந்த மாங்காய் மரம் சுவையாக இருக்கிறதோ அதன்மீது தான் கல்லெடுத்து அடிப்பார்கள். கல்லடிபட்டு தான் அந்த மாங்காய் மரம் மக்களுக்கு மாம்பழத்தை கொடுக்கும். அதே போல் நான் விமர்சனத்திற்கு அஞ்சுபவன் கிடையாது. எனக்கென்று தனி பாணியாக ஒரு அரசியல் இருக்கிறது. அந்த அரசியலில் எனக்கு முன்பிருந்த அரசியல்வாதிகள் இப்படித்தான் அரசியல் செய்தார்கள் என அப்படிப்பட்ட அரசியலை செய்ய விரும்பவில்லை.
என்னுடைய அரசியல் மாற்று அரசியல். நான் தேசியக் கட்சியில் இருந்தாலும், ஒரு பெரிய கட்சியில் இருந்தாலும் என்னை பொறுத்தவரை தமிழகத்தில் இப்பொது நடக்கக்கூடிய எந்த அரசியலும் மக்களுக்கு பிடிக்கவில்லை. தேர்தலில் மக்களுடன் தான் பாஜக கூட்டணி அமைத்து வெற்றி பெற்றுள்ளது. தற்போதும் அப்படிதான். மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, பாதயாத்திரையின்போது மக்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை, "திமுக கூறிய, கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை, ஒரு டன்னுக்கு 4000 ரூபாய், வாழைக்கு குறைந்தபட்ச ஆதார விலை, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்தில் நெல் கிடங்கு அமைக்கப்படும் என்ற ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை. கோபி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நம்பியூர் பகுதிகளில், பெரும்பாலும் பனை ஏறும் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் தயாரிக்கும் கருப்பட்டி, பனைவெல்லம் போன்றவற்றை சேமித்து விற்பனை செய்ய சேமிப்பு கிடங்கு அமைத்து தர பல முறை மனு அளித்தும், தற்போது வரை சேமிப்பு கிடங்கு அமைத்து தரவில்லை.
திமுக தேர்தல் வாக்குறுதி எண் 56ல், பனை வெல்லத்தை விவசாய கூட்டுறவு சங்கங்கள் நேரடியாக கொள்முதல் செய்யும் மற்றும் சேமிப்பு கிடங்கு அமைப்போம் என்று கூறியிருந்தார்கள். அதனையும் நிறைவேற்றவில்லை. கோபி பகுதியில், காந்தி அடிகளால் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தவர் மறைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர் லட்சுமண ஐயர். தனது குடும்ப சொத்தான 345 ஏக்கர் நிலத்தை விற்று பட்டியல் சமூகக் குழந்தைகளுக்கு தங்கும் வசதிகொண்ட பள்ளிகளை கட்டிக்கொடுத்தவர்.
கோபி நகராட்சித் தலைவராக இருந்தபோது மனித கழிவுகளை மனிதனே அள்ளக்கூடாது என்று தடை விதித்தார். கோபி நகர குடிநீர்த் திட்டத்தைக் கொண்டு வந்ததோடு, தன்னுடைய சொந்த நிலத்தை இலவசமாக வழங்கினார். 1972-ல் திமுக கொண்டு வந்த மின் கட்டண உயர்வுக்கு எதிராக நடந்த விவசாயிகள் போராட்டத்தில் சிறை சென்றார். கோபி நகரம் தியாகி லட்சுமண ஐயர் போன்ற சீர்திருத்தவாதிகளால் பெருமை கொள்கிறது.
ஈரோடு மாவட்டத்துக்கு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த நலத் திட்டங்கள் ஏராளம். ஆனால் திமுக, ஈரோடு மாவட்டத்துக்குக் கொடுத்த ஒரு தேர்தல் வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை. வரும் பாராளுமன்ற தேர்தலில், இந்த மக்கள் விரோத திமுக கூட்டணியை முற்றிலுமாகப் புறக்கணித்து, தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து, பாரதப் பிரதமர் மோடி அவர்களை மூன்றாவது முறையாகப் பிரதமராகத் தேர்ந்தெடுப்போம்." எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications