வாக்காளர்களுக்கு பணமழை..திமுக அதிகார துஷ்பிரயோகம்..தேர்தல் அதிகாரிகளும்..லிஸ்ட் போட்டு இபிஎஸ் தாக்கு
ஈரோடு கிழக்கு தொகுதியில் பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது என்றும், அதிமுக வேட்பாளருக்காக பணியாற்றிய கட்சியினருக்கு நன்று தெரிவித்துக்கொள்வதாகவும் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டது. தேர்தல் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசு 43,981 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார். இந்த நிலையில், பணநாயகத்தின் மூலம் திமுக வெற்றி பெற வைத்துள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்திப்பின் போது கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளருக்காக பணியாற்றிய கட்சியினருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கூட்டணி கட்சித்தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். திரிபுரா, நாகலாந்து மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஈரோடு கிழக்கு தொகுதியில் ஜனநாயகமா பணநாயகமா என்று பார்க்கும் போது பணநாயகம் தான் வெற்றி பெற்றுள்ளது.
ஈரோடு கிழக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடக்கும் நாள் வரை வாக்காளர்களுக்கு தினம்தோறும் திமுக பண மழை பொழிந்தது. 30 அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டு 22 மாத காலத்தில் திமுக ஆட்சியில் சம்பாதித்த பணத்தை வைத்துகொண்டு தேர்தலில் தண்ணீர் போல பணத்தை வாரி இறைத்தது. ஜனநாயக படுகொலை செய்து காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிக்காக அதிகார துஷ்பிரயோகம் செய்தார்கள்.
ஆரம்பத்தில் இருந்தே வாக்காளர்களை 120 இடங்களில் டெண்ட் போட்டு ஆடுகளை பட்டியில் அடைப்பது வாக்காளர்களை அடைத்து வைத்து அசைவ உணவு கொடுத்து தினந்தோறும் ஆயிரம் பணத்தை கொடுத்து பல்வேறு பரிசு பொருட்களை கொடுத்தனர். அதோடு ஒவ்வொரு வாக்காளர் வீட்டிற்கும் 2 கிலோ கோழிகறியும் கொடுத்துள்ளனர். தேர்தல் முடிந்த பிறகு 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மளிகை சாமான்கள் கொடுப்பதாக டோக்கன் வழங்கிதான் மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளனர்.
ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றால் அதிமுக வெற்றி பெற்றிருக்கும். தமிழகத்தில் இதற்கு முன்பு பல இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது. எந்த தேர்தலிலும் இந்த அளவுக்கு விதி மீறல் நடைபெற்றது இல்லை. தேர்தல் விதிமீறல்களை மீறி நடந்து கொண்டதால் திமுக இந்த வெற்றியை பெற்றுள்ளது. திமுக கட்சி ஆர்.கே நகரில் டெபாசிட் இழந்தது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications