ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வீடு வீடாக சென்று தபால் வாக்குகள் சேகரிப்பு- வாக்களித்த 95 வயது மூதாட்டி
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்குகளைச் செலுத்தும் பணி நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ஆவணங்களை சரிபார்த்து தபால் வாக்குகளைப் பெற்று வருகின்றனர். 95 வயது மூதாட்டி சண்முகவள்ளி உள்ளிட்டோர் நேற்று தபால் வாக்குகளைச் செலுத்தினர்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறுகிறது. இத்தொகுதியில் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் 256 பேர் உள்ளனர். இவர்கள் தபால் வாக்குகளைச் செலுத்த விண்ணப்பித்திருந்தனர். இவர்களிடம் தபால் வாக்குகளைப் பெறும் பணி நேற்று முதல் தொடங்கியது. இந்த பணி வரும் 27-ந் தேதி வரை நடைபெறும்.

முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளிடம் தபால் வாக்குகளைப் பெறுவதற்காக 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினரிடம் தபால் வாக்குகளைப் பதிவு செய்வோரின் விவரங்கள் வழங்கப்பட்டிருந்தன. இதனடிப்படையில் இந்தக் குழுக்கள் வீடு வீடாக வாக்குப் பெட்டி, தபால் வாக்குக்கான விண்ணப்பம், வேட்பாளர்களின் சின்னங்களுடனான வாக்குச் சீட்டு ஆகியவற்றுடன் சென்றனர். வீடுகளில் உள்ள முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளிடம் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சரிபார்த்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக மறைப்பு அட்டைகள் அமைக்கப்பட்டு வாக்களிக்க செய்தனர். ஈரோடு ஈஸ்வரன் கோவில் குடோன் வீதியில் 95 வயது மூதாட்டி சண்முகவள்ளி உள்ளிட்டோர் நேற்று வாக்குகளை செலுத்தினர்.
இந்த தபால் வாக்குகளைப் பெறும் பணி இன்றும் நாளையும் நடைபெறும். இதனையடுத்து மீண்டும் திங்கள்கிழமை தபால் வாக்குகள் பெறப்படும்.












Click it and Unblock the Notifications