வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் உங்கள் முன்பு நிற்கிறேன்.. இங்கேயே தான் மடிவேன்.. இளங்கோவன் உருக்கம்!
சிலர் அண்ணாமலையை பற்றி சொல்கிறார்கள், எனக்கு எந்த மலையைப் பற்றியும் கவலை இல்லை என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியுள்ளார்.
ஈரோடு : "வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் உங்கள் முன் நிற்கிறேன். நான் இங்கே தான் இருப்பேன், இங்கேயே தான் மடிவேன்" என ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது உருக்கமாகப் பேசியுள்ளார் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா உள்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. திமுகவினர், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்காக தொகுதி முழுவதும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரச்சாரம்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக ஈரோடு கிழக்கு தொகுதியில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ ஆகியோர் திறந்தவெளி பிரச்சார வாகனத்தில் கை சின்னத்திற்கு வாக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கடைசி கட்டத்தில்
பிரச்சாரத்தின் போது பேசிய காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், "வாழ்க்கையின் பல கட்டங்களைக் கடந்து வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இங்கு வந்து உங்கள் முன்னால் நிற்கிறேன். இந்த ஈரோடு மக்களுக்கு நல்ல பல திட்டங்களை செய்து நான் இந்த திட்டங்களைச் செய்தேன் என்று தாய்மார்களும் பொதுமக்களும் சொல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம். அதனால் நான் மக்கள் பணி செய்ய வாய்ப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மகன் விட்டுச் சென்ற பணிகளை
நீங்கள் எனது தாத்தா பெரியார் மீது பாசம் வைத்துள்ளீர்கள். அவர் ஈரோடு நகர்மன்றத் தலைவராக இருந்தார். அவர் காலத்தில் தான் வீட்டுக்கு வீடு குடிநீர் குழாய் போடும் திட்டம் தமிழ்நாட்டிலேயே முதலில் ஈரோட்டில் கொண்டுவரப்பட்டது. எனது மகனைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா என்று சொல்வது போய் திருமகன் ஈவெராவின் தந்தை இவர் என்ற பெயரை வாங்கி கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். மகன் விட்டுச் சென்ற பணிகளை தொடர வேண்டும் என்ற நிலை எனக்கு வந்துள்ளது.

எந்த மலையை பற்றியும் கவலையில்லை
சிலர் அண்ணாமலை என்றெல்லாம் சொல்கிறார்கள்.. எனக்கு எந்த மலையை பற்றியும் கவலை இல்லை. ஈரோடு மாநகராட்சியை சிறந்த மாநகராட்சியாக கொண்டு வர அமைச்சர் முத்துசாமியோடு இணைந்து செயலாற்றுவேன். சிலர் நான் வெற்றி பெற்றுவிட்டால் சென்னைக்கு சென்று விடுவேன் என்று கூறுகின்றனர். சென்னைக்கு சென்றால்தானே காரியங்களை கவனிக்க முடியும், திட்டங்களை நிறைவேற்ற முடியும், முதலமைச்சரை சந்திக்க முடியும். நான் இங்கே தான் இருப்பேன், இங்கே தான் மடிவேன்.

அந்த சொத்தே எனக்குப் போதும்
பேசுவதற்கேன்றே சிலர் இருக்கின்றனர், அவர்கள் காரியங்களை செய்யமாட்டார்கள், எனக்கு தேவைகள் அதிகம் கிடையாது. எங்களுக்கு பூர்வீக சொத்து உள்ளது. முன்னோர் சேர்த்து வைத்த அந்த சொத்தே எனக்குப் போதும். நல்ல காரியங்களைச் செய்து புகழ் என்ற செல்வத்தை தான் நான் சம்பாதிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தானைத் தலைவன் ஸ்டாலின் முதல்வராக இருக்கும் போது மக்களுக்கு பணி செய்ய ஆவலுடன் இருக்கிறேன். ராகுல் காந்தி கட்டளையின் முன்பு நான் நிற்கிறேன், அதனால் எனக்கு ஒரு வாய்ப்பளிக்க கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்" எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications