வேட்டியோடு வந்து திடீரென பேண்ட் அணிந்து வாக்குசாவடிக்குள் போன தேமுதிக வேட்பாளர்
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ஓட்டு செலுத்த வந்த தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் ஓய்ந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் ஓட்டளிக்க சென்ற தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கு திடீரென்று அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவருக்கும், தேர்தல் அலுவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு சிறிது நேரம் கழித்து ஆனந்த் வேஷ்டியில் இருந்து பேண்ட்டுக்கு மாறி வாக்களித்தார். அங்கு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த மாதம் காலமானார். இதையடுத்து இன்று அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுகவில் தென்னரசு, தேமுதிகவில் ஆனந்த், நாம் தமிழர் கட்சியில் மேனகா உள்பட மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர்.

துவங்கிய ஓட்டுப்பதிவு
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் கூறியபடி இன்று ஓட்டுப்பதிவு துவங்கியது. இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. மக்கள் காலை முதலே ஆர்வமாக வந்து வாக்களித்தனர். நீண்ட வரிசையில் நின்று மக்கள் அமைதியான முறையில் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். மாலை 6 மணி வரை மக்கள் ஓட்டு போடலாம்.

தேமுதிக வேட்பாளருக்கு அனுமதி மறுப்பு
இந்நிலையில் தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கும், தேர்தல் நடத்தும் அலுவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தேமுதிக வேட்பாளர் ஆனந்த் அக்ரஹாரம் மதரஸா பள்ளியில் ஓட்டு செலுத்த வந்தார். அப்போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனந்த் தேமுதிக கட்சியின் துண்டும், கட்சியின் கரை வேஷ்டியும் அணிந்திருந்தார். இதனால் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

பேண்ட் அணிந்து ஓட்டு போட்ட வேட்பாளர்
அதாவது ஆனந்த் அணிந்திருந்த துண்டு, வேஷ்டி ஆகியவை கட்சியை குறிப்பிடும் வகையில் உள்ளது. இதனால் அனுமதிக்க முடியாது. இதனை மாற்றி வர வேண்டும் என வாக்குச்சாவடியில் உள்ள அலுவர் கூறினார். இதனால் அவருக்கும் தேர்தல் அலுவலருக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தேர்தல் விதிமுறை பற்றி தேர்தல் அலுவலர் விளக்கினார். அதைக்கேட்ட ஆனந்த் அங்கிருந்து சென்றார். அதன்பிறகு கட்சி துண்டை நீக்கவிட்டு வேஷ்டிக்கு பதில் பேண்ட் அணிந்து வந்து அவர் அதே பூத்தில் வாக்களித்தார்.

யோசித்து ஓட்டளியுங்கள் என வேண்டுகோள்
அதன்பிறகு தேமுதிக வேட்பாளர் ஆனந்த் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‛‛தேர்தலில் எனது ஓட்டை பதிவு செய்துள்ளேன். இளைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தங்களின் ஓட்டை பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். எந்த வேலை இருந்தாலும் கூட தேர்தலில் ஓட்டளிப்பது என்பது மிக முக்கியம். மக்கள் நல்ல வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை மீட்டு எடுக்கும் வேட்பாளர் யார்? என்பதை யோசித்து மக்கள் வாக்களிக்க வேண்டும். கட்சியை குறிப்பிடும் வகையிலான துண்டு போடக்கூடாது என தேர்தல் அலுவலர் கூறினர். இது விதிமுறையாகும். இதுபற்றிய விபரத்தை என்னிடம் கூறவில்லை. இதனால் கட்சியை குறிக்கும் அடையாளங்களை தவிர்க்க வேண்டும் என்றார். அதனை நான் பின்பற்றி ஓட்டளித்தேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications