ஈரோடு கிழக்கு ரிசல்ட்..வாக்கு எண்ணிக்கை வெளிப்படைத்தன்மையாக நடக்கிறது..கலெக்டர் விளக்கம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில் முடிவுகள் அறிவிக்கப்படுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இரண்டு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னரும் முடிவுகள் அறிவிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மையுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி விளக்கம் அளித்துள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி 238 வாக்குச்சாவடிகளிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 2 சுற்றுகள் முடிந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் 3வது சுற்று வாக்கு எண்ணிக்கையை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவை அறிவிக்க அதிகாரிகள் தாமதிப்பதால் செய்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்க மறுத்ததால் காவல்துறையினருடன் செய்தியாளர்கள் வாக்குவாதம் செய்தனர். வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என காவல்துறையினரிடம் வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னரும் இதுவரை வேட்பாளர்கள் பெற்ற அதிகாரப்பூர்வ வாக்குகள் குறித்த பட்டியலை இதுவரை தரவில்லை எனவும் செய்தியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி பேச்சுவார்த்தை நடத்தினார். இதுபோன்ற வாக்கு எண்ணிக்கையை நாங்கள் பார்த்ததில்லை என்று செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவு காரணமாகவே வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்தியாளர்களை அனுமதிக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி விளக்கம் அளித்தார்.
வாக்கு எண்ணிக்கை வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுகிறது. அனைத்து கட்சியை சேர்ந்த முகவர்களும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் இருக்கின்றனர். ஒவ்வொரு சுற்று முடிவிலும் சரியான வாக்குகளை உறுதிப்படுத்திக்கொண்டுதான் கூற முடியும் அப்படி கூறாவிட்டால் அதுவும் தவறாகி விடும்.
செய்தியாளர்களைப் பொருத்தவரை மீடியா கம்யூனிகேசன் அறை திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்று வாக்குகள் எண்ணப்பட்ட உடன் முடிவுகள் அறிவிக்கப்படும். அடுத்தடுத்த சுற்றுகளில் எண்ணப்படும் வாக்குகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications