"ஒற்றை தலைமை".. சல்லி சல்லியாக நொறுங்கிய எடப்பாடி பிளான்.. ஈரோடு கிழக்கால் வந்த புது சிக்கல்!
ஈரோடு கிழக்கு சட்டசபை ரிசல்ட் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் முக்கியம் ஆகும்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் வெற்றிபெறுவது அல்லது நல்ல வாக்கு சதவிகிதம் எடுப்பது அரசியல் ரீதியாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மிக முக்கியமான விஷயமாக இருந்தது. ஆனால் இன்று வெளியான முடிவுகளில் அதிமுக கடந்த முறையை விட மோசமான வாக்குகளை பெற்று தோல்வி அடையும் நிலைக்கு சென்று உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகினறன. இன்று கடந்த 27ம் தேதி தேர்தல் நடந்த நிலையில் அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா மரணம் அடைந்ததை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இங்கே திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து அதிமுக சார்பாக கேஎஸ் தென்னரசு போட்டியிட்டார்.

தேர்தல்
ஈரோடு கிழக்கில் இதுவரை காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 104907 வாக்குகளை கடந்து முன்னிலை பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் 41666 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி 7986 வாக்குகளை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. தேமுதிக வெறும் 1017 வாக்குகளை மட்டும் பெற்றுள்ளது. இதனால் திமுக தரப்பு பிரம்மாண்ட வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கே அதிமுக படுதோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் வெற்றிபெறுவது அல்லது நல்ல வாக்கு சதவிகிதம் எடுப்பது அரசியல் ரீதியாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மிக முக்கியமான விஷயமாக இருந்தது. ஆனால் இன்று வெளியான முடிவுகளில் அதிமுக கடந்த முறையை விட மோசமான வாக்குகளை பெற்று தோல்வி அடையும் நிலைக்கு சென்று உள்ளது. ஆளும் கட்சியை எதிர்த்து வெற்றிபெறுவது கடினம் என்றாலும் எடப்பாடி டீம் இங்கே குறிப்பிட்ட வாக்கு சதவிகிதத்தையாவது பெற்று இருக்க வேண்டும். அதாவது 50 ஆயிரத்தையாவது கடந்து இருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. இன்று வந்த தேர்தல் முடிவுகள் அவரின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் விதமாக இருக்க போகிறது. அதற்கான காரணங்களும் இருக்கின்றன. கிட்டத்தட்ட இந்த தேர்தல் நேரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அனைத்து விஷயங்களும் தோதாக அமைந்து இருந்தன.

சின்னம் கிடைத்தது
உதாரணமாக ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் அதிகாரபூர்வ அதிமுக வேட்பாளர் ஆகிவிட்டார். பொதுக்குழு மூலம் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில் பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம் மூலம் கே.எஸ் தென்னரசு வேட்பாளர் ஆகிவிட்டார். இவருக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து ஓ பன்னீர்செல்வம் தனது தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காததாலும், பாஜக கேட்டுக்கொண்டதால் ஓ பன்னீர்செல்வம் வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளார்.

பாஜக சப்போர்ட்
இன்னொரு பக்கம் அதிமுக வாக்குகளை பிரிக்கும் அமமுக கட்சியும் தற்போது ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. தங்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்று இந்த முடிவை எடுத்துள்ளதாக அமமுக அறிவித்துள்ளது. அதேபோல் இந்த தேர்தலில் பாமக போட்டியிடவில்லை என்றும் முன்பே அறிவித்துவிட்டது. பாஜகவும் நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை. அதிமுகவை ஆதரிக்கிறோம். இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் கே. எஸ் தென்னரசுவை ஆதரிக்கிறோம் என்று அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக சட்டபூர்வ அதிமுக வேட்பாளரை முன்னிறுத்தி இருக்கும், இடைக்காலப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமிக்கும், பொதுநலன் கருதி, கூட்டணியின் நன்மை கருதி, தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்றிருக்கும் அண்ணன் ஓ.பன்னீர்செல்வமிற்கும், நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன், என்று கூறி உள்ளார். அதாவது எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளர் என்றும், ஓபிஎஸ்ஸை வெறும் அண்ணன் என்றும் அண்ணாமலை அழைத்துள்ளார். இதன் மூலம் பாஜக ஆதரவு எங்கே எடப்பாடிக்கு கிடைத்துவிட்டது என்று கேள்வி எழுந்துள்ளது. மொத்தத்தில் ஓபிஎஸ் நிற்கவில்லை, அமமுக தரப்பு நிற்கவில்லை, பாஜக நிற்கவில்லை. எடப்பாடிக்கு எல்லாம் சாதகமாக அமைந்தது.

தேர்தலுக்கு முன் வெற்றி
அதோடு தேர்தலுக்கு சரியாக 3 நாட்களுக்கு முன் பொதுக்குழு வழக்கிலும் ஓ பன்னீர்செல்வம் தோல்வி அடைந்து எடப்பாடி பழனிசாமி வென்றார். கட்சிக்கு யார் தலைமை.. இரட்டை தலைமையா? ஒற்றை தலைமையா? என்ற கேள்வி நிலவி வந்த நிலையில்தான் அனைத்து கேள்விகளுக்கும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் விடை கிடைத்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வந்த நிலையில் தீர்ப்பு வழங்கினர். அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது செல்லும். அதிமுக பொதுக் குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்கிறோம். அதிமுக பொதுக் குழு வழக்கில் உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ஏற்கிறோம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதனால் அந்த விஷயமும் எடப்பாடிக்கு பூஸ்ட்டாக அமைந்தது.

ஆளும் கட்சி விமர்சனம் - கொங்கு மண்டலம்
இதெல்லாம் போக ஆளும் கட்சி மீது சிலர் விமர்சனங்கள் இருந்தன. சில திட்டங்களை நிறைவேற்றவில்லை, சொத்துவரி, மின்சார கட்டணத்தை உயர்த்தியது போன்ற நடவடிக்கைகள் விமர்சனத்திற்கு உள்ளாகின. இது போக இந்த தேர்தல் கொங்கு மண்டலத்தில் நடக்கிறது. அது அதிமுகவின் கோட்டை. இப்படி எல்லா விஷ்யங்களும் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த தேர்தலில் சாதகமாக இருந்தது. ஆனால் இப்படி இருந்தும் எடப்பாடி தரப்பால் வெற்றபெற முடியவில்லை. அதோடு இந்த தேர்தலில் மோசமான வாக்கு சதவிகிதத்தை வேறு அதிமுக எடுத்து உள்ளது. இதுதான் தற்போது எடப்பாடியின் ஆளுமையை கேள்வி கேட்க வைத்துள்ளது . அதாவது எடப்பாடி தனியாக ஒற்றை தலைமை இருந்து ஜெயிக்க முடியவில்லை என்ற வாதம் எழ தொடங்கி உள்ளது. இதை எப்படி எடப்பாடி சமாளிக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications