"மோடி" மீட்ட கறுப்பு பணம் வந்துருச்சு.. ரூ1 கோடி வேணுமாங்கண்ணா? "சதுரங்க வேட்டை 2.0"- கதறுது ஈரோடு!
ஈரோடு: ஈமு கோழி, மண்ணுளி பாம்பு, காந்த படுக்கை என நூதன மோசடிகளுக்கு பஞ்சமில்லாத பூமி மேற்கு மாவட்டம். சதுரங்க வேட்டை படம் எடுத்த பின்னரும் சளைக்காத பேர்வழிகள், ஏமாறுவதற்காகவே நேர்ந்துவிடப்பட்டவர்கள் புற்றீசல்களாக புறப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்பதை சொல்லுகிறது இந்த "மோடி பணம்" மோசடி.
ஈரோடு போலீசில் மொடக்குறிச்சி கோவிந்தநாயக்கன் பாளையம் விஜயசங்கர் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பிரதமர் மோடி வெளிநாட்டு கறுப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவருவோம் என அறிவித்திருந்தார். 2019-ல் ஊத்துக்குளியை சேர்ந்த சிலர் என்னை சந்தித்து, கறுப்பு பணத்தை மோடி ஒழிக்கிறார்.. அந்த கறுப்பு பணம் மீட்கப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த தொகை உங்களுக்கு வேண்டும் எனில் ரூ1 லட்சம் கொடுங்க.. ரூ1 கோடி கிடைக்கும் என ஆசைவார்த்தைகளால் தூண்டினர்.

ரூ1 கோடி வங்கி கணக்குக்கு வரும் என்கிற ஆசைவார்த்தை நம்பி ரூ1 லட்சமும் கொடுத்தேன். ஆனால் பணம்தான் வரவில்லை. இதனைத் தொடர்ந்து கூடுதலாக ரூ2.10 லட்சம் கேட்டனர். அதனையும் கொடுத்தேன். ஆனால் ரூ1 கோடியும் வரவில்லை. நான் கொடுத்த ரூ3.10 லட்சம் பணமும் வரவில்லை. நான் அறியாமையால் இழந்த பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும். இவ்வாறு விஜயசங்கர் புகார் மனுவில் கூறியுள்ளார்.
ஒரு விஜயசங்கர் அல்ல.. மொடக்குறிச்சியை சுற்றி பலரிடம் இப்படி சதுரங்க வேட்டை பட பாணியில் பேசி பேசி பல லட்சம் ரூபாயை மோசடி கும்பல் 'கொள்ளை'யடித்திருக்கிறது. இதனால் ஏமாந்து போனவர்கள் வரிசையாக ஈரோடு போலீசில் அடுத்தடுத்து புகார் கொடுத்து வருகின்றனர். தற்போதைக்கு ஏமாந்தவர்கள் எண்ணிக்கை 40-ஐ எட்டி இருக்கிறது.
பிரதமர் மோடியின் கறுப்பு பண மீட்பு நடவடிக்கை மூலமாக வரும் பணம் 'அறக்கட்டளை'களுக்கு முதலில் போகுமாம்.. அந்த 'அறக்கட்டளை'கள் வசமாகும் பணத்தில் பெருந் தொகை உங்களுக்கு கிடக்கும்.. அதற்குதான் இந்த முன்பணம் என்று சளைக்காமல் சொல்லி சொல்லி சுளையாக பல கோடி ரூபாயை விழுங்கிவிட்டதாம் மோசடி கும்பல். இந்த மோசடி கும்பல் தற்போது தலைமறைவாகிவிட்டனர். இவர்களை ஈரோடு போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications