மறக்கமுடியாத மகன் நினைவு! கண்களில் ததும்பும் நீர்! உருகும் ஈவிகேஎஸ் இளங்கோவன்! தேற்றும் ஆதரவாளர்கள்!
மறைந்த மகனை மறக்க முடியாமல் தவிக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் களம் அனல் பறக்கும் நிலையில் மறைந்த தனது மகனின் நினைவை மறக்க முடியாமல் அவ்வப்போது சோர்வடைந்து விடுகிறாராம் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
அண்மையில் கூட பிரச்சாரத்துக்கு செல்ல முடியாத அளவுக்கு மகனின் நினைவுகளில் மூழ்கி வீட்டிலேயே ஒரு நாள் முழுவதும் இருந்திருக்கிறார்.
இதனிடையே அவரது ஆதரவாளர்களும், குடும்ப உறுப்பினர்களும் தான் ஈவிகேஎஸ் இளங்கோவனை அவ்வப்போது தேற்றி ஆசுவாசப்படுத்தி வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரக இருந்த திருமகன் ஈவெரா அண்மையில் மாரடைப்பு காரணமாக காலமானார். அவர் மரணமடைந்த 17 நாட்களில் தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம். இவ்வளவு வேகமாக இடைத்தேர்தல் வரும் என்பதை எந்த அரசியல் கட்சியும் எதிர்பார்க்கவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

பிரச்சாரத்தில் பேச்சு
தனக்கு பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தனது மூதாதையர்கள் நிறைய சம்பாதித்து வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள் எனவும் பிரச்சாரத்தில் பேசி வருகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன். மறைந்த தனது மகன் திருமகன் ஈவெரா விட்டுச்சென்ற பணிகளை தாம் தொடர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே தேர்தலில் போட்டியிடுவதாக பிரச்சாரத்தில் உருக்கமுடன் பேசுகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன். ஒரு சில இடங்களில் கண்ணீர் விட்டு அழுகவும் செய்கிறார்.

மகன் நினைவு
இதனிடையே மகன் இறந்து அந்த இடத்தில் தாம் போட்டியிடுவதை ஈவிகே எஸ் இளங்கோவனால் இன்னும் ஜீரணிக்கவே முடியவில்லையாம். இப்படியொரு நிலை வந்திருக்கக் கூடாது என குடும்பத்தினர் மற்றும் நெருக்கமான ஆதரவாளர்கள் மத்தியில் தழுதழுக்கவும் செய்கிறாராம். இதனிடையே அண்மையில் கூட பிரச்சாரத்துக்கு செல்ல முடியாத அளவுக்கு மகனின் நினைவுகளில் மூழ்கி வீட்டிலேயே ஒரு நாள் முழுவதும் இருந்திருக்கிறார்.

ஆதரவாளர்கள் மட்டும்
ஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தபோது அவரால் கட்சிப் பதவி பெற்றவர்கள், பயன் அடைந்தவர்கள் என அவரது ஆதரவாளர்கள் மட்டுமே ஈரோடு கிழக்கில் முகாமிட்டு தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். மற்றபடி காங்கிரஸ் தரப்பிலிருந்து பெரியளவில் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய யாரும் ஈரோடு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications