மோடி "கடவுளின் அவதாரம்" ஆச்சே? ஏன் பேரிடருக்கு முன்பே ஸ்டெப் எடுக்கல? பாஜகவை கேட்டது யார்னு பாருங்க
ஈரோடு: கடவுளின் அவதாரம் என்று சொல்லும் மோடி, இயற்கை பேரிடர் வரும் முன்பு நடவடிக்கை எடுக்கவில்லையே ஏன்? என்று தமிழக காங்கிரஸின் ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
ஈரோட்டில் இன்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது அவர் சொன்னதாவது:

கள் விற்பனை: "கள் பருகுவதால் உடல்நலம் பாதிப்பு ஏற்படாது. கள்ளுக்கடை திறந்தால் கள்ளச்சாராயம் விற்பனை குறையும். கள் விற்பனை செய்ய அனுமதி அளித்தால் விவசாயிகள் வாழ்வாதாரம் உயரும்.
கவர்னர் இமயமலைக்கு சென்று தியானம் செய்வதை விட்டு, தமிழகத்தில் ஏன் கவர்னராக மத்திய அரசு போட்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மத்திய அரசு ஆந்திரா, பீகார் மாநிலத்திற்கு 10 ஆண்டுகளாக ஆட்சி எதுவும் செய்யாமல் தற்போது ஏன் நிதியை அதிகமாக ஒதுக்கீடு செய்கிறார்கள்?
அநாகரீகம்: பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சி கூட்டணி ஒத்துழைப்போடு அமைத்த சூழலில் கூட பாராளுமன்ற கூட்டத்தில் வரம்பு மீறி பேசுகிறார்கள். மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், ராகுல் காந்தி பார்த்து சாதி பற்றி பேசுவது அநாகரிகமான செயல். மட்டமான பேச்சை மத்திய அமைச்சர்களுக்கு சொல்லிக் கொடுத்தது பிரதமர் மோடி தான். மத்திய அமைச்சர்கள் அவதூறாக பேச வேண்டும் என தூண்டி விடுவதால் ஜனநாயகம் எப்படி இருக்கிறது என்று சிந்திக்க வேண்டும்.
ஆனால் ராகுல் காந்தி பெரும் தன்மையாக தனது பேச்சில் கண்ணியத்தை கடைப்பிடித்து உள்ளார். மோடியின் சர்வாதிகார தன்மை நீண்ட நாளுக்கு நீடிக்காது. நீடித்தால் வன்முறையுடன் அல்லது வன்முறை இல்லாமல் மோடி வீழ்த்தப்படுவார். ஆட்சியில் இருந்து நாட்டு மக்கள் அவரை துரத்தி விடுவார்கள்.
சமஸ்கிருத மொழி: அது காந்தி வழியா? நேதாஜி வழியா? என்று தெரியவில்லை. புதிய சட்டத்தின் பெயர்கள் இந்தி சமஸ்கிருத மொழியில் மாற்றி இருக்கிறார்கள். இதற்கு நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் நீதிபதிகள் சட்டத்தை பெயர் மாற்றத்தை பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த சட்டத்தை மத்திய அரசு திருத்தம் செய்ய வேண்டும்.
கேரள மாநிலம் வயநாட்டில் இயற்கை பேரிடர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் ராகுல் காந்தி தான் காரணம் என்று மத்திய அரசு சொல்கிறது.
கடவுளின் அவதாரம்: கடவுளின் அவதாரம் என்று சொல்லும் மோடி, இயற்கை பேரிடர் வரும் முன்பு நடவடிக்கை எடுக்கவில்லையே ஏன்? ராமர் கோவில் மீது செலுத்திய கவனத்தை மோடி மலை பிரதேசங்களிலும் செலுத்த வேண்டும். தமிழகத்தில் பல்வேறு மக்கள் பயனடையும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவரிடம் பிரதமர்மோடி திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து டியூஷன் எடுக்க வேண்டும்" என்றார் சீனியர் தலைவர் இளங்கோவன்.
சில நாட்களுக்கு முன்பும் செய்தியாளர்களிடம் பேசியிருந்த ஈவிகேஎஸ், பிரதமரை கடுமையாக விமர்சித்திருந்தார்.. "ஒரு நாடக நடிகரை போல செயல்படுகிறார். தேர்தல் முடிவுகளுக்கு பிறகும்கூட, மோடி தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. அவரது நடை, உடை பாவனை எல்லாமே. நடிகர் மாதிரியே இருக்கிறது.. அரசியல் சாசனத்தை முத்தமிட்டு, சிறந்த வேஷம் போடுகிறார்
நிதிஷ்குமார்: தேர்தலுக்கு முன்புகூட உளறிக்கொண்டிருந்தார். அதனால் அவர் திருந்துவதற்கு வழியே இல்லை. பாஜக எதிரியாக நினைப்பது எதிர்க்கட்சிகளை இல்லை. கூட்டணிக் கட்சிகளைத்தான். அதனால், பாஜகவுக்கு ஆதரவு தரும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் விரைவில் கூட்டணியை விட்டு வெளியேறுவார்கள்.. சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும் எப்போது வேண்டுமானாலும் ஆதரவை விலக்கி கொண்டு வெளியே வந்துவிடுவார்கள்" என்று ஆரூடம் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications