கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தவருக்கு நேர்ந்த விபரீதம்.. மயங்கி விழுந்தவர் பலி.. ஈரோட்டில் ஷாக்!
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த நபர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. பத்திர எழுத்தராகப் பணியாற்றி வரும் சுப்பிரமணி, தனது குடும்பத்தினருடன் அங்கு வசித்து வருகிறார். தினமும் தமது வீட்டின் அருகே சங்கு நகரில் உள்ள சிறிய மைதானத்தில் கால்பந்து விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார் சுப்பிரமணி.

இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் மைதானத்திற்கு சென்ற சுப்பிரமணி, அங்கு கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயக்கமடைந்த அவர் பின்பக்கமாக விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு சுயநினைவின்றி இருந்த சுப்பிரமணியை, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுப்பிரமணி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
சுப்பிரமணி மரணம் அடைந்ததை அடுத்து, சக கால்பந்து வீரர்கள் மற்றும் சுப்பிரமணியின் குடும்பத்தினர் கதறி அழுதது அங்கிருந்தவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விளையாடிக் கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூராய்வு முடிவுகள் வந்த பின்னரே, சுப்பிரமணியின் இறப்பிற்கான காரணம் தெரியவரும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications