2026-லும் திமுக கூட்டணியில் தான்.. சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த மதிமுக பொதுக்குழு!
ஈரோடு: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக தொடர்ந்து நீடிக்கும் என்றும், திமுக கூட்டணியில் அதிகமான தொகுதிகளைக் கேட்டு பெற்று போட்டியிடுவது என்றும் மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2026 சட்டசபை தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. திமுக கூட்டணியை பொறுத்தவரை ஏற்கனவே இருக்கும் கட்சிகள் கூட்டணியில் தொடர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே, திமுக சார்பில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் வழங்கப்படாததால் சலசலப்புகள் எழுந்தன.

மத்திய அமைச்சர் எல்.முருகன், திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், அந்தக் கட்சி வாஜ்பாய் காலத்தில் எங்களுடன் கூட்டணியில் இருந்தது" எனத் தெரிவித்தார். இதனால், பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வரும் கட்சி மதிமுகவோ என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.
இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக தொடர்ந்து நீடிக்கும் என்றும் திமுக கூட்டணியில் அதிகமான தொகுதிகளைக் கேட்டு பெற்று போட்டியிடுவது என்றும் ஈரோடு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதிமுகவின் 31-வது பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் இன்று நடைபெற்றது. மதிமுக அவைத் தலைவர் அர்ஜூன் ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக் குழு கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஈரோடு மதிமுக பொதுக்குழு கூட்டத்தில், 2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை மதிமுக மீண்டும் பெறவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு திமுக கூட்டணியில் அதிகமான தொகுதிகளைக் கேட்டுப் பெற்றுப் போட்டியிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.












Click it and Unblock the Notifications