மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி
சென்னை: நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வேட்பாளராக கிருத்திகா சிவ்குமார் களமிறக்கப்பட்டுள்ளார்.
இவர் தற்போதைய மொடக்குறிச்சி தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் சரஸ்வதியின் மருமகளாவார். திமுகவை குறிவைத்து வாரிசு அரசியல் என்று விமர்சனம் செய்து வரும் பாஜகவில் தற்போது மருமகளுக்காக, மாமியார் விட்டு கொடுத்துள்ள நிலையில் பாஜக வேட்பாளர் கிருத்திகா சிவ்குமாரின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

யார் இவர்?
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டசபை தொகுதி பாஜக வேட்பாளராக கிருத்திகா சிவ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் முதலில் அதிமுகவில் செயல்பட்டு வந்தார். அதிமுக மகளிரணி இணை செயலாளராக இருந்தார்.
ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்களில் புங்கேற்றார். அதன்பிறகு தான் அவர் பாஜகவில் ஐக்கியமானார். தன்னார்வ தொண்டு நிறுவனம் வைத்து செயல்பட்டு வரும் கிருத்திகா சிவ்குமார், தற்போது பாஜகவில் தன்னார்வ தொண்டு நிறுவன பிரவின் மாநில செயலாளராக பணியாற்றி வருகிறார்.
மாமியாருக்கு பதில் மருமகள்
இந்நிலையில் தான் மொடக்குறிச்சி தொகுதியில் அவர் களமிறங்கி உள்ளார். மொடக்குறிச்சி தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் சரஸ்வதி டாக்டர் ஆவார். இவருக்கு தற்போது 80 வயது ஆகிறது. இதனால் அவர் போட்டியிட விரும்பவில்லை. இதையடுத்து அவருக்கு பதில் அவரது மருமகள் கிருத்திகா சிவ்குமாருக்கு பாஜக வாய்ப்பு வழங்கி உள்ளது.
வாரிசு அரசியல் பேசும் பாஜக
பாஜகவை எடுத்து கொண்டால் வாரிசு அரசியலை தீவிரமாக எடுத்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் திமுக வாரிசு அரசியல் செய்வதாகவும், ஸ்டாலின் குடும்ப அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும் மேடைக்கு மேடை பாஜக தலைவர்கள் முழங்கி வருகின்றனர். இப்படியான சூழலில் மொடக்குறிச்சி தொகுதியில் மாமியாரான சிட்டிங் எம்எல்ஏவுக்கு பதில் மருமகள் கிருத்திகா சிவ்குமாருக்கு வாய்ப்பு வழங்கி உள்ளது.
2021 தேர்தலில் நூலிழை வெற்றி
கடந்த 2021 சட்டசபை தொகுதியில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட சி சரஸ்வதி மொத்தம் 78,125 ஓட்டுகளை பெற்றார். அவரை எதிர்த்து களமிறங்கிய திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் 77,844 ஓட்டுகள் பெற்றார். இதனால் சி சரஸ்வதி நூலிழையில் வென்றார்.
இருவருக்கும் இடையேயான ஓட்டு வித்தியாசம் வெறும் 281 மட்டும் தான். இதனால் இந்த முறையும் மொடக்குறிச்சி சட்டசபை தொகுதியில் போட்டி கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications