எனது ஆட்சி காலத்திலேயே நீட் தேர்வில் விலக்கு.. அதுவே என் லட்சியம்.. ஈரோட்டில் மு.க.ஸ்டாலின் உறுதி!
என்னுடைய ஆட்சி காலத்திலேயே நீட் தேர்வுக்கு விலக்கு பெறவேண்டும் என்பதே லட்சியம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோடு: என்னுடைய ஆட்சி காலத்திலேயே நீட் தேர்வுக்கு விலக்கு பெற வேண்டும் என்பதே லட்சியம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய நீட் தேர்வு விலக்கு மசோதா பற்றி மத்திய அரசு கவலை கொள்ளவில்லை என்று விமர்சித்த மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு விலக்கு மசோதாவை நிறைவேற்றுவதற்கு தமிழ்நாடு அரசு அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார்.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தகுதித் தேர்வை கட்டாயமாக்கி மத்திய அரசு அறிவித்தது. தமிழ்நாட்டில் கடந்த 2017ல் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.
நீட் தேர்வு காரணமாக கிராமப்புறத்தில் உள்ள ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு பறிபோவதாகவும், அதனால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

நீட் விலக்கு மசோதா
அதேபோல் திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறப்படும் என்று தேர்தலின் போது வாக்குறுதியாக அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்டசபையில் நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை சபாநாயகருக்கு ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதன் பின்னர் மீண்டும் நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இதன் பின்னர் தமிழ்நாடு அரசின் மசோதாவை, ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் கோரிய நிலையில், தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் குழு பதில் தயாரித்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில், மத்திய அரசுக்கு பதில் அளிக்கப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் உச்சநீதிமன்றத்திலும் அதிமுக ஆட்சியில் பதியப்பட்டு நிலுவையில் இருந்த நீட் தேர்வுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற்று, தமிழ்நாடு அரசு சார்பாக ஒரிஜினல் சூட் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வு பற்றி ஸ்டாலின்
இதனிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறவில்லை என்று எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். ஈரோடு மாவட்டம் சம்பத் நகரில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நீட் தேர்வுக்குரிய விலக்கு சட்ட மசோதாவை சட்டசபையில் இரு முறை நிறைவேற்றி இருக்கிறோம்.

என் லட்சியம் இதுதான்
அதனைப் பற்றி தமிழ்நாட்டின் ஆளுநரோ, மத்திய அரசோ சிந்திக்கவும் இல்லை. அதுகுறித்து கவலைப்படவும் இல்லை. ஆனால் எனது ஆட்சி காலத்திலேயே நீட் தேர்வுக்குரிய விலக்கை பெற்றுவிட வேண்டும் என்பதே லட்சியம். அதனை நிறைவேற்றுவதற்கு அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications