ஆளுங்கட்சியிடம் பணம் இருக்கு.. எங்க கிட்ட மானமுள்ள இனம் இருக்கு.. ரைமிங்கில் பதிலளித்த சீமான்!
ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான காரணம் பற்றி சீமான் கூறியுள்ளார்.
ஈரோடு: ஆளுங்கட்சியிடம் பணம் இருப்பதாகவும், தன்னிடம் கொள்கை மற்றும் கருத்து மட்டுமே இருப்பதாகவும் நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார். அதேபோல் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈரோட்டில் முகாமிட்டு இடைத்தேர்தலில் வாக்கு சேகரித்து வருவது ஜனநாயக அத்துமீறல் என்று தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளராக கேஎஸ் தென்னரசு, தேமுதிக வேட்பாளராக ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மேனகா போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒங்கிணைப்பாளர் சீமான் சூரம்பட்டி , திருநகர் காலனி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்தார்.

சீமான் பேட்டி
அப்போது சூரம்பட்டியிலிருந்து வேட்பாளர் மேனகா மற்றும் அக்கட்சி நிர்வாகிகளோடு திறந்த வெளி பிரச்சார வாகனத்தில் திருநகர் காலனி வரை ஊர்வலமாக சென்று கரும்பு விவசாயி சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து சீமான் கூறுகையில், வெற்றிக்கு ஒரே வழி உழைப்பு தான். அவர்களிடம் பணம் இருக்கிறது. என்னிடம் மானமுள்ள இனம் இருக்கிறது. அவர்களிடம் காசு இருக்கிறது. என்னிடம் கருத்து இருக்கிறது. என்னிடம் கோடிகள் இல்லை. கொள்கைகள் இருக்கிறது என்று தெரிவித்தார்.

3ம் இடம்
தொடர்ந்து, சட்டப்பேரவையில் வாக்கு சதவிகிதத்தில் நாம் தமிழர் கட்சி மூன்றாமிடம் பிடித்தது. ஆனால் தொடர்ந்து மூன்றாமிடத்திலேயே இருக்க முடியாது. முன்னேறி செல்ல வேண்டும். அதற்காகவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுகிறோம். மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். வேளாண் மக்கள், விசைத்தறி தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். பெருந்துறை தொகுதி எல்லாம் இந்திக்காரர்கள் அதிகமாக இருக்கின்றனர். ஆக்கிரமித்து வருகிறார்கள். இதுபோன்ற பேராபத்து இருக்கிறது என்று தெரிவித்தார்.

ஜனநாயக அத்துமீறல்
அதேபோல், ஈரோடு கிழக்கு தொகுதியில் தோல்வியடைந்தால் ஆளுங்கட்சிக்கு தன்மான பிரச்சினையாக இருக்கும். அதனால் அமைச்சர்கள், எம்பி-க்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகாமிட்டு இடைத்தேர்தலில் வாக்கு கேட்டு வருவது ஜனநாயக அத்துமீறல் என்று தெரிவித்தார்.

கொள்கையில்லை
பின்னர், மாடு கட்டுப்பிடி தினம் பற்றிய கேள்விக்கு, இது அவர்களுக்கே அசிங்கம் என்று பட்டதால் பிப்ரவரி 14 ம் தேதி Cow day-வை திரும்ப பெற்றுள்ளனர். பசுவை தொட்டால் புனிதம், மனிதன் தொட்டால் தீட்டு என்கிற கூட்டமாக உள்ளது. அவர்களுக்கு கொள்கையும், இல்லை கோட்பாடும் இல்லை என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications