நாதக டெபாசிட் காலி.. 1,967 வாக்குகள் வித்தியாசத்தில் டெபாசிட்டை இழந்து சீதாலட்சுமி படுதோல்வி!
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி டெபாசிட் கூட பெறாமல் தோல்வியை சந்தித்துள்ளார். டெபாசிட் பெறுவதற்கு 25,777 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், நாதக வேட்பாளருக்கு 23,810 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் இந்த இடைத்தேர்தலில் நாதக படுதோல்வியை சந்தித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமாரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. பிப்.5ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றியை பெற்றுள்ளார். இதனை திமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனிடையே நாம் தமிழர் கட்சி டெபாசிட் வாங்குமா என்ற கேள்வி எழுந்தது.

டெபாசிட் தொகை என்பது ஒவ்வொரு வேட்பாளரும் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது தேர்தல் அலுவலரிடம் செலுத்துவர்கள். சட்டமன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளர் ரூ.10 ஆயிரம் டெபாசிட் தொகை செலுத்த வேண்டும். தேர்தலுக்கு பின் இந்த டெபாசிட் தொகை மீண்டும் அளிக்கப்படும். ஆனால் அதற்கு, அந்த வேட்பாளர் தேர்தலில் பதிவான வாக்குகளில் 6ல் ஒரு பங்கு வாக்கினை பெற்றிருக்க வேண்டும்.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி டெபாசிட் வாங்குவாரா என்ற கேள்வி மக்களிடையே இருந்து வந்தது. அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்த நிலையில், திமுகவை எதிர்த்து நாதக மட்டுமே வேட்பாளரை களமிறக்கியது. இத்தனை கட்சிகள் போட்டியிடாத போது, நாதக வேட்பாளர் டெபாசித் தொகை வாங்கவில்லை என்றால், மிகப்பெரிய விமர்சனங்கள் எழும்.
தற்போது நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 23,810 வாக்குகளை பெற்று தோல்வியடைந்துள்ளார். இந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி டெபாசிட் வாங்குவதற்கு மொத்தமாக 25,777 வாக்குகளை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் நாதக 1,967 வாக்குகள் வித்தியாசத்தில் டெபாசிட் தொகையையும் இழந்து தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த இடைத்தேர்தலில் டெபாசிட் வாங்கி இருந்தால் நாம் தமிழர் கட்சிக்கு கவுரவமான தோல்வியாக அமைந்திருக்கும். நாடாளுமன்றத் தேர்தலில் எந்த தொகுதியில் வெற்றிபெறவில்லை என்றாலும், 8 சதவிகித வாக்குகளை பெற்று மாநிலக் கட்சி அந்தஸ்தை பெற்றது. இதனால் இடைத்தேர்தலில் டெபாசிட் வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது நாதக டெபாசிட் கூட பெற முடியாமல் படுதோல்வியை சந்தித்துள்ளது.












Click it and Unblock the Notifications