ஈரோடு அருகே கணவர் இறந்த துக்கத்தில் உயிரிழந்த மனைவி... வாழ்விலும், சாவிலும் இணைப்பிரியாத தம்பதி!
ஈரோடு : ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே, கணவர் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் உயிரிழந்த நிலையில், தம்பதிகள் இருவரையும் ஒரே தகன மேடையில் எரியூட்டிய சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஒவ்வொருவரின் வாழ்நாளிலும் திருமணம் என்பது எப்படி முக்கியமாக உள்ளதோ, அதுபோலவே திருமண பந்தம் எப்போதும் வாழ்வின் இறுதி நொடி வரையில் நீடிக்க கூடியது. பரஸ்பர அன்பும், காதலையும் வெளிப்படுத்துபவர்களுக்கு இந்த திருமண பந்தம் அஸ்திவாரங்களாக அமைகின்றன. இப்படியானவர்கள் மரணத்திலும் இணை பிரிய மாட்டார்கள். இதற்கு சாட்சியாக அமைந்துள்ளது ஈரோட்டில் நிகழ்ந்த ஒரு சோக சம்பவம்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் பகுதியை சேர்ந்த முத்துச்சாமி - ஐயம்மாள் தம்பதியினருக்கு ராஜேந்திரன் என்ற மகனும், மாரியம்மாள் என்ற மகளும் உள்ளனர். 90 வயதான முத்துச்சாமியும், 85 வயதான அவரது மனைவி ஐயம்மாளும் மகன் ராஜேந்திரனின் பராமரிப்பில் இருந்து வந்தனர்.
இந்நிலையில், வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாகவே முத்துச்சாமியின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தது. அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாலும் உடல் போதியளவு ஒத்துழைக்கவில்லை. வீட்டில் படுத்த படுக்கையாக இருந்த அவர், திடீரென நேற்று உயிரிழந்தார்.
அதனைத்தொடர்ந்து அவரது மனைவி ஐயம்மாள், தனது கணவர் முத்துச்சாமியின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் சோகத்தில் மூழ்கினார். திருமணமாகி 60 ஆண்டுகள் இணைபிரியாமல் வாழ்ந்த கணவரின் உடல் மீது படுத்து கதறி அழுதபடியே இருந்தார். தொடர்ந்து அழுதுகொண்டிருந்த ஐயம்மாள், திடீரென கணவர் உடல் மேல் திடீரென மயங்கி விழுந்தார்.
மயங்கிய நிலையில் இருந்த ஐயம்மாளை, அருகிலிருந்த அவரது மகன் மற்றும் மகள் ஆகியோர் எழுப்ப முயன்றபோது அவரும் உயிரிழந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, முத்துச்சாமியின் உடலுக்கு அருகிலேயே ஐயம்மாளின் உடலையும் வைத்து, உறவினர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் இறுதிச்சடங்கு மற்றும் ஊர்வலம் நிறைவடைந்த பின்னர், கணவன் மனைவி இருவரும், ஒரே தகன மேடையில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் எரியூட்டப்பட்டனர்.
இன்பத்திலும், துன்பத்திலும் ஒன்றாக வாழ்ந்து வந்த கணவர் உயிரிழந்த துக்கத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் மனைவியும், கணவருடன் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.