மன்னித்து விடுங்கள்.. தம்பியை பார்த்துக் கொள்ளுங்கள்.. தற்கொலை கடிதத்தில் ஸ்ரீமதி உருக்கம்
ஈரோடு: டெல்லியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி திடீரென தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் எழுதிய கடிதம் போலீஸிடம் சிக்கியது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலாம்பாளையம் பகுதியைச் சர்ந்தவர் தங்கராஜ் (45). இவருடைய மனைவி தேவி(43). இவர்களுக்கு ஸ்ரீமதி (20), வருண்ஸ்ரீ (16) ஆகிய இரு குழந்தைகள் இருந்தனர். கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. முடித்துள்ளார் ஸ்ரீமதி.

அறை
ஐஏஎஸ் படிக்க விரும்பியதால் அவர் டெல்லியில் உள்ள ஒரு ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 6 மாதங்களுக்கு முன்பு சேர்ந்தார். அந்த மையத்தின் மாடியில் உள்ள கட்டடத்தில் அறை எடுத்து தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் ஸ்ரீமதியுடன் தங்கியிருந்த மற்றொரு மாணவி வெளியே சென்றுவிட்டு அறைக்கு வந்துள்ளார்.

பெற்றோருக்கு தகவல்
அப்போது ஸ்ரீமதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார். இதையடுத்து அவரை மீட்பு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். எனினும் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதிர்ச்சி
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு அறையில் ஒரு கடிதத்தையும் மீட்டனர். அதில் என்னை மன்னித்து விடுங்கள். தம்பியை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். ஸ்ரீமதி தீபாவளிக்கு ஊருக்கு வருவதாக தனது குடும்பத்தினரிடம் இரு தினங்களுக்கு முன்பு கூறியிருந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை
இதையடுத்து ஸ்ரீமதியின் உடல் இன்று சத்தியமங்கலம் கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. டெல்லியில் படிக்க செல்லும் மாணவர்கள் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பது தெரியவில்லை. தற்கொலைக்கான காரணம் குறித்து டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications