பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? பிரதமர், வெளியுறவுத்துறை தான் சொல்லனும்.. துரைமுருகன் சொன்ன பதில்!
பிரபாகரன் விவகாரம் நம்ம ஊர் சமாச்சாரம் இல்லை என்று துரைமுருகன் கூறியுள்ளார்.
ஈரோடு: பிரபாகரன் விவகாரம் நம்ம ஊர் சமாச்சாரம் இல்லை என்றும், அது குறித்து பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சரும் தான் பதில் கூற வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அதேபோல் பல தேர்தல்களை பார்த்த திமுகவுக்கு, ஈரோடு இடைத்தேர்தல் பெரிதல்ல என்றும் கூறியுள்ளார்.
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், 2009ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்படவில்லை. தற்போதும் உயிருடன் நலமுடன் இருக்கிறார். பிரபாகரன் விரைவில் வெளியே வருவார்.
பிரபாகரனின் அனுமதியுடன் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன் என்று தெரிவித்தார். மேலும் சர்வதேச சூழலும் இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பி இருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும் தமிழீழத் தேசியத் தலைவர் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?
இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளியான செய்திக்கு இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ரவி ஹேரத் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரவி ஹேரத் கூறுகையில், விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தற்போது உயிருடன் இல்லை. 2009 மே 18ல் நடந்த இறுதிகட்ட போரில் அவர் உயிரிழந்ததற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் துரைமுருகன்
இதுகுறித்து பிரபாகரனோடு நெருங்கிய தொடரில் இருந்த கொளத்தூர் மணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறும் செய்தியை சீமான் மறுத்துள்ளார். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணிகளுக்காக அமைச்சர் துரைமுருகன் ஈரோடு வந்தார். அதன்பின்னர் ஈரோடு அக்ரஹாரம் பகுதியில் உள்ள தேர்தல் பணிமனையில் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

பல தேர்தலை பார்த்துள்ளோம்
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து துரைமுருகன் கூறுகையில், பல தேர்தலை பார்த்த திமுகவுக்கு, இது ஒன்றும் பெரிதல்ல. திமுகவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து திமுக மீது தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புகார் அளித்தது பற்றிய கேள்விக்கு, புகார் அளிக்கட்டும். அதற்கு தேர்தல் ஆணையம் பதில் சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.

நம்ம ஊர் சமாச்சாரம் இல்லை
பின்னர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ.நெடுமாறன் கூறியது பற்றிய கேள்விக்கு, பிரபாகரன் விவகாரம் நம்ம ஊர் சமாச்சாரம் இல்லை. வேறு ஒரு நாட்டில் நடந்த சதி. அதனை நெடுமாறன் கூறுகிறார். அதுகுறித்து பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சரும் தான் பதில் கூற வேண்டும். இதில் எனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications