ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் செங்கோட்டையன்.. டெல்லி சென்று திரும்பியதும் முழு வேகம்!
ஈரோடு: டெல்லிக்குச் சென்று திரும்பிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். ஹரித்வார் செல்வதாக கூறிவிட்டு டெல்லி சென்ற செங்கோட்டையன் அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகி இருந்தது.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைத்து, அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று 10 நாட்கள் கெடு விதித்து, செப்டம்பர் 5 ஆம் தேதி பேசியிருந்தார். இதற்கு பதிலடியாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரை அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து உடனடியாக நீக்கினார்.

இந்த முடிவை எதிர்த்து, செங்கோட்டையனின் ஆதரவாளர்கள், "கட்சி ஒன்றுபட்டால் மட்டுமே பதவிகளில் தொடர்வோம்" என்று கூறி தங்கள் பொறுப்புகளை ராஜினாமா செய்தனர். செங்கோட்டையனின் கட்சி பதவி பறிப்பை கண்டித்து அறிக்கை வெளியிட்ட, எதிர்ப்பு தெரிவித்த நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியை விட்டு நீக்கப்பட்டு வருகின்றனர்.
அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்று செங்கோட்டையன் கூறிய நிலையில், ஓ பன்னீர்செல்வம் இதற்கு முழு ஆதரவை தெரிவித்தார். ஓபிஎஸ் ஆதரவாளர்களும் செங்கோட்டையனை சந்தித்து முழு ஆதரவை கொடுத்து வருகின்றனர்.
திமுகவில் பல குழப்பங்கள் நீடிக்கும் நிலையில் செங்கோட்டையன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். டெல்லி புறப்படும் முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்தபோது ஹரித்வாருக்கு பயணம் மேற்கொள்வதாக தெரிவித்தார். ஆனால், அன்று இரவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார் செங்கோட்டையன்.
இந்த நிலையில், டெல்லியில் இருந்து திரும்பியதும் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன், அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து அரசியல் சூழல் குறித்து விவாதித்ததாக தெரிவித்தார். மேலும், ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியதாக தெரிவித்தார். அதிமுக வலிமை பெற உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாகவும் தெரிவித்தார். அனைவரின் ஒத்துழைப்போடு மக்கள் பணிக்காக தொடர்ந்த போராடுவேன் என செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த அதிமுகவினர் 50-க்கும் மேற்பட்டோர் இரண்டு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்து செங்கோட்டையன் இல்லத்தில் அவருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, அமமுக நிர்வாகிகள் சிலரும் செங்கோட்டையனை சந்தித்து ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, செங்கோட்டையன் ஆதரவாளர்களைச் சந்தித்து வருகிறார். டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications