16 வயது சிறுமியை கடத்தியதே தப்பு.. இதில் கல்யாணம் வேறு.. இளைஞரை பிடித்த போலீஸ்!
16 வயது பெண்ணை கடத்தி திருமணம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.
Recommended Video

ஈரோடு: 16 வயது பெண்ணை கடத்தியதுடன், முருகன் கோயிலில் வச்சு தாலியும் கட்டிய இளைஞரை போலீசார் ரவுண்டு கட்டி கைது செய்தனர்.
ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு தம்பதி தங்களது 16 வயது மகளை காணவில்லை என்று மகளிர் போலீசில் புகார் அளித்தனர். 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு மகள் வீட்டில்தான் இருந்தாராம்.

மகளை காணோம்
கடந்த 20-ம் தேதி காலையில் வேலைக்கு சென்றுவிட்டு சாயங்காலம் வீட்டுக்கு திரும்பி போனால் மகளை காணோம் என்றும், கண்டுபிடித்து தாருங்கள் என்றும் ஒரு மனுவையும் தந்தார்கள். இதை தவிர மற்ற இடங்களிலும் பெற்றோர் மகளை தேடி வந்தார்கள்.

கடத்தல் வழக்கு
பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசாரும் விசாரணையை ஆரம்பித்தனர். அப்போது, சிறுமி வசிக்கும் அதே சூரம்பட்டி பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர்தான் சிறுமியை கடத்தி கொண்டு போயிருக்கிறார் என்பது தெரியவந்தது. மோகன்ராஜூக்கு 26 வயதாகிறது. இதையடுத்து அவர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடுதல் வேட்டையும் ஆரம்பமானது.

தாலி கட்டிட்டேன்
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அரச்சலூர் பஸ் ஸ்டாண்ட் அருகே சிறுமியுடன் மோகன்ராஜ் நின்று கொண்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதனால் உடனடியாக பஸ் ஸ்டேண்டுக்கு போலீசார் விரைந்தனர். அங்கு சிறுமியுடன் மோகன்ராஜ் வேறு ஊருக்கு செல்ல நின்று கொண்டிருந்தார். அப்போது மோகன்ராஜை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். அங்கு நடத்திய விசாரணையில் மோகன்ராஜ் கூறியதாவது:

சிறுமி மீட்பு
"சிறுமியை கல்யாணம் செய்துக்கறதா ஆசை காட்டினேன். அதை நம்பி அந்த பொண்ணும் என்கூட வந்துடுச்சு. அதனால பழனி முருகன் கோயில்ல வச்சு தாலி கட்டிவிட்டேன்" என்றார். இதையடுத்து, மோகன்ராஜ் மீது ஆள் கடத்தல் மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். கடத்தப்பட்ட சிறுமியையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications