ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நிறுத்தமா? யாருமே அப்படி புகார் தரவில்லை.. சத்யபிரதா சாகு பரபர விளக்கம்
ஈரோடு இடைத்தேர்தலில் பெறப்படும் புகார்கள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கமளித்துள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே இடைத்தேர்தல் நிறுத்தப்படலாம் என்பது போல இணையத்தில் தகவல்கள் பரவியது. இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
ஈரோடு கிழக்கில் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் முடிந்துவிட்ட நிலையில், இப்போது அங்குக் களத்தில் 77 வேட்பாளர்கள் உள்ளனர். தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

ஈரோடு கிழக்கு
இதில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் களமிறங்குகிறது. அக்கட்சியின் மூத்த தலைவரும் மறைந்த திருமகன் ஈவேராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.. இடைத்தேர்தலில் நிச்சயம் வெல்ல வேண்டும் என்பதால் மூத்த திமுக அமைச்சர்கள் வேட்பாளர் அறிவிப்பிற்கு முன்னரே காங்கிரசுக்கு வாக்கு கேட்டு தங்கள் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனர். இப்போது ஈரோடு கிழக்கில் காங்கிரஸ், திமுக தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

வேட்பாளர்கள்
அதேநேரம் மறுபுறம், இதில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார் ஓபிஎஸ் தரப்பு மற்றும் அமமுக சார்பில் யாரும் போட்டியிடாத நிலையில், இரட்டை இலை வாக்குகள் அனைத்தும் அதிமுகவுக்குச் செல்லும் சூழல் உருவாகியுள்ளது. இது தவிர நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்ற இளம் பெண் போட்டியிடுகிறார்.. இவர்களைத் தவிர தேமுதிக வேட்பாளரும் களத்தில் உள்ளார். மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

புகார்கள்
அதேநேரம் ஈரோடு கிழக்கு தொகுதியில் பல விதிமீறல்கள் நடப்பதாகவும் தேர்தல் ஆணையத்திற்குப் புகார்கள் அளிக்கப்பட்டன. பெறப்படும் புகார்கள் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே முறையான அனுமதி பெறாமல் அமைக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட தேர்தல் பணிமனை அலுவலகங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், தொடர்ச்சியாகப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இன்று திமுக மீது தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

விளக்கம்
புகாரை அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஈரோடு கிழக்கில் ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்குப் பணம், பிரியாணி கொடுப்பதாகக் குற்றஞ்சாட்டினார். மேலும், பணநாயகத்தைவிட அதிமுக ஜனநாயகத்தைத்தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார். இதற்கிடையே பலரும் புகார் அளித்து வருவதால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நிறுத்தப்படலாம் என்பது போல இணையத்தில் தகவல்கள் பரவியது. இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

புகார் அளிக்கலாம்
இன்று செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாகு, "ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை முறையான ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 61.70 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முறைகேடு என்று கூறி பரவும் காணொலிகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுகிறது. எனவே, புகார் அளிப்போர் சி- விஜில் செயலி மூலம் புகார் அளிக்கலாம். சி- விஜில் செயலியில் தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்படுவதில்லை என்பதால் தைரியமாகப் புகார்களை அளிக்கலாம்.

தேர்தல் நிறுத்தமா
இதுவரை சி- விஜில் செயலி மூலம் ஒரே ஒரு புகார் மட்டுமே பெறப்பட்டுள்ளது. அனைத்துக்கட்சி கூட்டத்திலும் இது தொடர்பாகத் தெரிவித்துள்ளோம். ஈரோடு கிழக்கில் சட்ட ஒழுங்கு சீராகவே இருக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாகப் பல புகார்கள் வந்தாலும் கூட.. இதுவரை தேர்தலை நிறுத்த வேண்டும் என்று எந்தவொரு புகாரும் வரவில்லை. அளிக்கப்படும் அனைத்து புகார்கள் குறித்தும் விரிவான விசாரணை நடத்துகிறோம்.

நடவடிக்கை
மேலும், டெல்லி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட புகார்கள் குறித்தும் நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.." என்று அவர் தெரிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதியில் இப்போது 77 வேட்பாளர்கள் களத்தில் இருக்கும் நிலையில், வரும் பிப். 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து வரும் மார்ச் 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications