டிஆர்பி செயலர் சொந்த ஊரில் விஜிலென்ஸ் ரெய்டு.. யாரும் உள்ளே வரக்கூடாது.. சல்லடை போடும் அதிகாரிகள்!
ஈரோடு: ஈரோடு அருகே தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகனின் வீடு மற்றும் அவரது மாமனார் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளராக இருப்பவர் ராமேஸ்வர முருகன் (55). இவர் சென்னையில் வசித்து வருகிறார். இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த வெள்ளாங்கோவில். அங்கு ராமேஸ்வர முருகனுக்கு சொந்தமாக வீடு உள்ளது. இந்த வீட்டில் அவரது தாய் மற்றும் தந்தை வசித்து வருகின்றனர். ராமேஸ்வர முருகன் அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து வீட்டில் தங்கிச் செல்வது வழக்கம்.

இந்நிலையில் இன்று காலை ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் ரேகா தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் வெள்ளாங்கோவிலில் உள்ள ராமேஸ்வர முருகன் தந்தை வசிக்கும் வீட்டிற்கு சோதனையிடச் சென்றர். வீட்டில் ராமேஸ்வர முருகனின் தாய், தந்தை மட்டும் உள்ள நிலையில், அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வீட்டிலிருந்து யாரும் செல்ல வெளியே அனுமதிக்கவில்லை. அதேபோல் வெளியே இருந்து யாரும் விட்டுக்கு உள்ளே செல்லவும் அனுமதிக்கவில்லை. வீட்டில் உள்ள தொலைபேசி இணைப்பையும் அதிகாரிகள் துண்டித்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் சோதனையிட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் ராமேஸ்வர முருகனின் மாமனார் அறிவுடைநம்பியின் வீடு ஈரோடு அக்ரஹார வீதியில் உள்ளது. இவர் அதே பகுதியில் சொந்தமாக நகைக்கடை வைத்துள்ளார். அவரது வீட்டிற்கும் இன்று காலை சென்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரது வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில், ராமேஸ்வர முருகன் பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநராக இருந்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. டிஆர்பி செயலர் தொடர்புடைய இடங்களில் விஜிலென்ஸ் அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications