அதிமுகவில் பகிரங்கமாக மோதல்-செங்கோட்டையன் கூட்டத்தில் இபிஸ் கோஷ்டி அடிதடி தகராறு- பறந்த நாற்காலிகள்!
ஈரோடு: அண்ணா திமுகவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கலகக் குரல் எழுப்பிய மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இருவரது கோஷ்டிக்கும் இடையேயான மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளது. ஈரோட்டில் செங்கோட்டையன் பங்கேற்ற அதிமுக கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் என கூறப்படுகிற சிலர் செங்கோட்டையன் ஆதரவாளர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அண்ணா திமுகவில் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக கே.ஏ.செங்கோட்டையன் குரல் கொடுத்து வருகிறார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அனைவரையும் ஒருங்கிணைத்து சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பது செங்கோட்டையனின் கருத்து. ஆனால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரனை மீண்டும் கட்சியிலேயே சேர்க்க முடியாது என்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இந்த மோதல்களுக்கு இடையே அதிமுக கூட்டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் செங்கோட்டையன் பங்கேற்று பேசி வருகிறார். ஈரோட்டில் இன்று நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் உட்கட்சி பூசல் பகிரங்கமாக வெடித்தது. செங்கோட்டையன் பங்கேற்ற இந்த கூட்டத்தில் அந்தியூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சிலரை அழைக்கவில்லை என கூறப்படுகிறது. அப்படி அழைக்காதவர்கள் சிலர் செங்கோட்டையன் பேசும்போது கூச்சல் எழுப்பினர். இதனால் செங்கோட்டையன் ஆதரவாளர்களுடன் அவர்கள் மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் நாற்காலிகளும் பறந்தன. செங்கோட்டையன் தரப்புடன் மோதலில் ஈடுபட்டவர்கள், எடப்பாடி பழனிசாமியால் அண்மையில் நியமிக்கப்பட்டவர்கள் எனவும் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் தகராறு செய்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை செங்கோட்டையன் ஆதரவாளர்கள் விரட்டியும் அடித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய செங்கோட்டையன் ஆதரவாளர் ஏகே செல்வராஜ், அதிமுகவில் முதலில் உட்கட்சி கட்டமைப்பை சரி செய்ய வேண்டும்; இப்படியான மோதல்கள் தொடர்ந்தால் வரும் சட்டசபை தேர்தலில் அண்ணா திமுக வெற்றி பெறுவதும் சந்தேகம் என கூறினார். இத்தகைய மோதல்கள் மற்றும் சர்ச்சை பேச்சுகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.













Click it and Unblock the Notifications