"கேக் வாக்".. ஓபிஎஸ் சொன்ன வார்த்தையால்.. திக்கு முக்காடி போன திமுக.. காங்கிரசும் குஷியாம்.. போச்சே!
ஈரோடு: அவன் அவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமாதான்டா இருக்கு என்று வடிவேல் டயலாக் போலத்தான் திமுக - காங்கிரஸ் கூட்டணியின் நிலை மாறி உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் "கேக் வாக்" வெற்றி என்று சொல்லும் அளவிற்கு அந்த கட்சிக்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் எதிர்பார்த்ததை விட தமிழ்நாடு அரசியலில் அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக உட்கட்சி மோதல் காரணமாக தேர்தல் களம் பற்றி எரிய தொடங்கி உள்ளது.
அங்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைப்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடக்கும் என்று இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளரை ஆதரிப்போம்- புதிய நீதி கட்சி அறிவிப்பு ஏன் முக்கியமானது?
பாஜக
இங்கே அதிமுக கூட்டணி சார்பாக தமிழ் மாநில காங்கிரஸின் யுவராஜா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கே தமிழ் மாநில காங்கிரசுக்கு பதிலாக அதிமுகவே போட்டியிடும் என்ற முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார். இன்னொரு பக்கம் இங்கே பாஜக போட்டியிடுவதற்கான அறிகுறிகளும் வர தொடங்கி உள்ளன. பாஜக இது தொடர்பாக தீவிர ஆலோசனைகளை செய்து வருகிறது. திமுக மட்டும் சிக்கலே இன்றி பெரிதாக ஆலோசனை எதையும் செய்யாமல் காங்கிரஸ் கட்சிக்கே இந்த இடத்தை கொடுத்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் ஈவெரா திருமகன். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார்.
காங்கிரஸ்
உடல்நிலை மோசமான நிலையில் ஈவெரா திருமகன் கடந்த ஜனவரி 4ம் தேதி மரணம் அடைந்தார். இது காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி ஆகும். இதனால் மீண்டும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் பெரிதாக பேச்சுவார்த்தை எதையும் நடத்தாமல் திமுக அந்த தொகுதியை காங்கிரஸுக்கே வழங்கி உள்ளது. இதற்காக பெரிதாக திமுக எதையும் யோசிக்காமல், ஆளும் கட்சி நாங்கள்தான் போட்டியிட வேண்டும் என்று சொல்லாமல் காங்கிரசுக்கு மரியாதை கருதி இடம் கொடுத்துள்ளது. முக்கியமாக கொங்கு மண்டலத்தில் பலத்தை நிரூபிக்க வேண்டும், லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும், சட்டசபையில் கூடுதல் எம்எல்ஏ வேண்டும் என்றெல்லாம் வாதம் வைத்து இடத்தை கேட்காமல், திமுக இங்கு காங்கிரசுக்கு மீண்டும் இடம் கொடுத்துள்ளது.
என்ன நடந்தது?
திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு தற்போது ஈரோடு அரசியலில் ஏற்படும் மோதல் சூழ்நிலை சாதகமாக மாறி உள்ளது. இங்கே திமுக - காங்கிரஸ் ஏற்கனவே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது. வேட்பாளரை அறிவிக்கும் முன்பே இங்கே பிரச்சாரம் ஆரம்பித்துவிட்டது. திமுக அமைச்சர்கள் கே என் நேரு உட்பட மூத்த தலைவர்கள் களமிறங்கி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். திமுக நிர்வாகிகள் பலரும் களப்பணியையும் தொடங்கிவிட்டனர். ஆனால் இன்னொரு பக்கம் அதிமுக தரப்பில் மிகப்பெரிய அளவில் மோதல்கள் வெடித்து உள்ளன. அதிமுக உட்கட்சி மோதல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலால் உச்ச கட்டத்தை அடைந்து உள்ளது.
வேட்பாளர்
ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி தனது தரப்பு வேட்பாளரை நிறுத்துவேன் என்று முடிவு எடுத்துள்ளார். அவரின் அதிமுக அணி சார்பாக வேட்பாளர் நிறுத்தப்பட உள்ளார். இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் என்னுடைய அணி சார்பாக வேட்பாளரை நிறுத்துவேன். நாங்கள்தான் உண்மையான அதிமுக. என்னால் சின்னம் முடங்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. சின்னம் முடங்காமல் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கட்சியில் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை.
பாஜக நிலைப்பாடு
இங்கே வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிப்போம். இன்னொரு பக்கம் பாஜக இங்கே போட்டியிடுகிறது என்றால் நாங்கள் விலகிக்கொள்வோம். பாஜக போட்டியிடும் பட்சத்தில் தேசிய கட்சி என்பதற்காக அவர்களுக்கு எங்களின் ஆதரவை தெரிவிப்போம் என்று ஓ பன்னீர்செல்வம் கூறினார். இது போக பாஜக வேறு இங்கே வேட்பளாரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறது. பாஜகவின் ஏபி முருகானந்தம் இங்கே நிறுத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இன்னொரு பக்கம் பாமக இங்கே போட்டியிட வாய்ப்பு இல்லை என்று அறிவித்துவிட்டது. எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் அறிவித்துவிட்டது.
திமுக - காங்கிரஸ்
இந்த மொத்த அரசியல் சூழ்நிலையும் திமுக - காங்கிரசுக்கு ஆதரவாக மாறி உள்ளது. எப்படி என்றால்..
1. அதிமுகவில் இரண்டு அணிகள் போட்டியிட்டால் இரட்டை இலை சின்னம் முடங்கும் - திமுக - காங்கிரஸ் கூட்டணி இது சாதகம்.
2. ஓபிஎஸ், பாஜக தனித்து போட்டியிட்டால் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரியும் - இதுவும் திமுக - காங்கிரஸ் கூட்டணி சாதகம்.
3. அதிமுகவிற்கு பாமக ஆதரவு இல்லாததால் ஈரோடு கிழக்கில் உள்ள 3% வன்னியர் வாக்குகளில் பெரும்பாலான வாக்குகள் திமுக கூட்டணி பக்கம் செல்லலாம். திமுக - காங்கிரஸ் கூட்டணி இது சாதகம்.
ஏற்கனவே இது திமுக கூட்டணி வென்ற தொகுதி. இப்போது அனுதாப அலையும் சேர்த்து, எதிர்க்கட்சி கூட்டணியில் மோதலும் உள்ளதால் திமுக - காங்கிரஸ் கூட்டணி சாதகமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.