ஈரோடு கிழக்கு ரிசல்ட்.. உளவுத்துறை தந்த ரிப்போர்ட்.. ஸ்டாலின் அவ்வளவு ஹாப்பி இல்லையாமே.. என்னாச்சு?
ஈரோடு: ஈரோடு கிழக்கில் திமுக வெற்றிப்பெற்றுள்ளது. ஆனால், இந்த வெற்றியில் முதல்வர் ஸ்டாலினுக்கு திருப்தி இல்லை என சொல்லப்படுகிறது. இதனை அமைச்சர் முத்துச் சாமியிடம் நேற்று இரவு வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார் முதல்வர் என்று திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, பிரதான கட்சிகள் அனைத்தும் தேர்தலை புறக்கணித்து விட்ட நிலையில், முந்தைய இடைத்தேர்தலை விட இந்த இடைத்தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகரிக்க வேண்டும் ; பதிவாகும் வாக்குகளில் 95 முதல் 99 சதவீதம் திமுகவுக்கு கிடைக்க வேண்டும் என்றுதான் தேர்தல் பொறுப்பாளர்களிடம் வலியுறுத்தியிருந்தாராம் முதல்வர்.
அதற்கேற்ப, அமைச்சர் முத்துச்சாமியும் தேர்தல் பொறுப்பாளர்களும் அதை வழி மொழிகிற மாதிரி உறுதிக் கொடுத்திருந்தனராம். ஆனால், அது நிறைவேறவில்லை என்பதில் முதல்வர் அப்செட் என்கிறார்கள். நம்மிடம் பேசிய திமுக இடைத்தேர்தல் பொறுப்பாளர்கள், '’முந்தைய தேர்தலை ஒப்பிடுகிறபோது இந்த தேர்தலில் வாக்குப்பதிவு 7 சதவீதம் குறைவு.

வாக்கு சதவிகிதம் குறைவு:
7 சதவீதம் என்பது பெரிய சதவீதம் தான். 7 சதவீத வாக்குப் பதிவு குறைவு என்பதையே முதல்வரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது, எதிர்க்கட்சிகளின் வாக்குகள் என மேலிடத்தில் நாங்கள் விளக்கமளித்தாலும் அதில் திருப்தி இல்லை. அதேபோல, பதிவான வாக்குகளில் 75 சதவீத வாக்குகள் தான் திமுகவுக்கு கிடைத்திருக்கிறது. அப்படியானால், 25 சதவீத வாக்குகள் எதிர்ப்பாக இருந்துள்ளது. பதிவாகாத 7 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தால் அது திமுகவுக்கு எதிரான வாக்குகள். ஏனெனில், திமுகவுக்கு ஆதரவான வாக்குகளாக இருந்திருந்தால் அவர்கள் வாக்களிக்காமல் இருக்க மாட்டார்கள். பூத்துக்கு வந்திருப்பர்.
வாக்களிக்கவில்லை என்பதால் அது திமுகவுக்கு எதிரான வாக்குகள் என அர்த்தம். அந்த வகையில் திமுகவுக்கு எதிர்ப்பு வாக்குகள் என்பது ( 25 + 7 ) 32 சதவீதம். பிரதான கட்சிகள் போட்டியிடாத போதே 32 சதவீதம் எதிர்ப்பு எனில், போட்டியிட்டிருந்தால்? ஆக. 95 சதவீத வாக்குகள் திமுகவுக்கு கிடைக்கும் என முத்துச்சாமி உள்ளிட்டவர்கள் உறுதியளித்திருந்த நிலையில், மேற்கண்ட புள்ளிவிபரங்களால் எங்கள் கட்சி தலைமைக்கு வெற்றி திருப்தி கொடுக்கவில்லை.
இது மட்டுமல்ல, கடந்த தேர்தலில் 10 ஆயிரம் வாக்குகள் வாங்கிய நாம் தமிழர் கட்சி இந்த முறை 14 ஆயிரம் வாக்குகள் வாங்கியிருக்கிறது. டெபாசிட்டை அந்த கட்சி இழந்திருந்தாலும் கூடுதல் வாக்குகள் வாங்கியதையும் நெகட்டிவ்வாகத்தான் தலைமை கவனிக்கிறது. திமுகவின் கடைசி நேர கவனிப்பு இல்லை என்றால், நாம் தமிழர கட்சி டெபாசிட்டை தக்கவைப்பதுடன் குறைந்தபட்சம் 40 ஆயிரம் வாக்குகள் வாங்கியிருக்கும். கிட்டத்தட்ட 30 ஆயிரம் வாக்குகள் (அதிமுக, பாஜக, விஜய் ரசிகர்கள் ) கடைசி நேரத்தில் கவனிக்கப்பட்டு அந்த வாக்காளர்களை பூத்துக்கு கச்சிதமாக அழைத்தும் வரப்பட்டனர். அதுதான் 1 லட்சம் வாக்குகளை திமுக கடக்க உதவியது. இதெல்லாம் உளவுத்துறையினர் முதல்வரிடம் தெரிவித்ததினால்தான், திமுகவின் இந்த வெற்றியில் முதல்வருக்கு அந்தளவுக்கு சந்தோசம் இல்லை. இதனை அமைச்சர் முத்துச் சாமியிடம் நேற்று இரவு வெளிப்படையாகவேச் சொல்லியிருக்கிறார் முதல்வர்’’ என்று விவரித்தனர்.












Click it and Unblock the Notifications