கோடிகளில் புரண்ட ஈரோடு கனகா.. மொத்தம் ஏமாந்தது 40 பேர்.. கடைசியில் சிக்கியது எப்படி?
ஈரோடு: ஈரோடு கொங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த அழகர்சாமியும், அவரது மகள் கனகாவும் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார்கள். ஆனால் ஏலச்சீட்டில் பணம் கட்டியவர்களுக்கு பணம் கொடுக்காமல் இவர்கள் சுமார் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், இளம் பெண் கனகாவை கைது செய்தனர். அவருடைய தந்தையான அழகர்சாமியை தீவிரமாக தேடி வருகிறார்கள்.. இவர்கள் நடத்திய ஏலச்சீட்டில் சுமார் 40க்கு மேற்பட்டோர் பல லட்சம் பணத்தை இழந்துள்ளார்கள்.
ஊர் பகுதிகளில் நம்பிக்கையின் அடிப்படையில் பக்கத்து வீடுகளில் உள்ள ஏலச்சீட்டுகளில் பணம் போட்டு ஏமாற வேண்டாம்.ஏனெனில் பலர் ஏலச்சீட்டு, மாதச்சீட்டு கட்டி ஏமாந்து வருகிறார்கள்.ரிசர்வ் வங்கி அனுமதி பெற்ற ஏலச்சீட்டு நிறுவனங்களில் பணம் போட்டால் பணத்திற்கு பாதுகாப்பு இருக்கும். மேலும் வட்டியும் சரியாக தருவார்கள்.

ஏமாற்றங்களுக்கு வாய்ப்பு இருக்காது. ஆனால் அப்படி பணம் போடாமல், பக்கத்து வீட்டில் உள்ளவர்கள், பணக்காரர்கள் என்று போய் ஏலச்சீட்டில் அல்லது மாதச்சீட்டில் போட்டால் ஒரு நாள் இல்லாவிட்டால், இன்னொரு நாள் ஏமாற்றம் தான் வரும். ஏனெனில் எவ்வளவு தான் நாணயமானவர்கள் என்று பெயர் எடுத்தாலும், பணம் வாங்கியவர்கள் பணத்தை திரும்ப தராமல் போனால், அவர்களால் பணத்தை திரும்ப தர முடியாமல் போக வாய்ப்பு உள்ளது. இல்லாவிட்டால் பணத்தை மோசடி செய்து திருடி செல்லவும் வாய்ப்பு உள்ளது. ஈரோட்டில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
ஈரோடு கொங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த 46 வயதாகும் அழகர்சாமி என்பவர் அந்த பகுதியில் நிதி நிறுவனமும், ஏலச்சீட்டும் நடத்தி வந்தார். இதன் பங்குதாரராக அழகர்சாமியின் மகள் மாரியம்மாள் என்கிற கனகா ஸ்ரீ (26) இருக்கிறார். அழகர்சாமியிடம் கடந்த 2019-ம் ஆண்டு ஈரோடு பெரியசேமூர் பகுதியை சேர்ந்த 48 வயதாகும் பாலு என்பவர் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் ஏலச்சீட்டில் சேர்ந்தார். ஏலச்சீட்டு நிறைவடைந்தும் அவருக்கு அழகர்சாமி பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் பாலு மீண்டும் அழகர்சாமியிடம் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் ஏலச்சீட்டில் சேர்ந்திருக்கிறார். இதனிடையே தொடர்ந்து பாலு பணம் கேட்டதால் தந்தையும், மகளும் தலா ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்துக்கான 2 காசோலைகளை வழங்கியுள்ளார்கள்.. ஆனால் வங்கிக்கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்பியது. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாலு இதுகுறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அழகர்சாமி மற்றும் மாரியம்மாள் இருவரும் அங்கீகாரம் இல்லாத ஏலச்சீட்டு நடத்தி பாலுவிடம் ரூ.7 லட்சத்து 49 ஆயிரத்து 500 மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதேபோல் 40-க்கும் மேற்பட்டவர்களிடம் ஏலச்சீட்டு நடத்தி சுமார் ரூ.1 கோடி மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாரியம்மாள் என்ற கனகாவை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கனகாவின் தந்தை அழகர்சாமியை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications