ஒசூர் அருகே பாஜக பிரமுகர் ஓட ஓட வெட்டி படுகொலை.. மகன் பிறந்தநாளன்று சோகம்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே பாஜக பிரமுகர் ஒருவர் ஓட ஓட வெட்டி கொலை செய்ததால் பரபரப்பு எழுந்துள்ளது. இந்த கொலையை கண்டித்து பாஜகவினர் பல இடங்களில் போராட்டம் நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே குந்துமாரனப்பள்ளியைச் சேர்ந்த ரங்கநாத் என்பவர் பாஜகவில் இளைஞரணியில் உள்ளார். ரங்கநாத் நேற்று இரவு தனது இளைய மகனான தனஞ்செயாவின் பிறந்தநாளை கொண்டாடினார்.
அப்போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த மர்ம கும்பல் ஒன்று அவரை சரமாரியாக தாக்கினர். இதையடுத்து அவர் அங்கிருந்து வெளியே ஓடத் தொடங்கினார்.

பயங்கர ஆயுதம்
அவரை ஓட ஓட உருட்டுக் கட்டையாலும் பயங்கர ஆயுதங்களாலும் கடுமையாக தாக்கினர். இதில் ரங்கநாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலையில் போத்தசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது.

கொலை
ரங்கநாத்துக்கும், போத்தச்சந்திரம் கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதனால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கெலமங்கலம் காவல் நிலைய போலீசார் பாஜக பிரமுகர் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேச்சுவார்த்தை
இந்த நிலையில் ரங்கநாத் கொலை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓசூர் கெலமங்கலம் சாலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அது போல் பாஜகவினரும் ஆங்காங்கே போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்த தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கீதா அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பாதுகாப்பு பணி
இதனிடையே போத்தசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ் என்பவர் குந்துமாரனபள்ளியில் நடத்தி வரும் மரக்கடையை ஒரு கும்பல் சூறையாடியது தெரியவந்தது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து அங்கு 30-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications