தமிழகம் வளர்ச்சியடைய கருணாநிதி ஆட்சி காரணம்.. ஓசூரில் பிரச்சாரம் செய்த சித்தராமையா பேச்சு
ஓசூர்: ஓசூர் தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ்ஷை ஆதரித்து கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டனர்.
கர்நாடகாவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தமிழக தொழில் நகரம் ஓசூர். இங்கு தமிழர்கள் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசுவோர் மிக அதிக அளவில் வசித்து வருகிறார்கள்.

எனவே கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் மூலம் ஓசூர் தொகுதி, திமுக வேட்பாளர் பிரகாஷுக்கு ஆதரவு திரட்ட கட்சி மேலிடம் முடிவு செய்தது.
இதையொட்டி நேற்று அவர்கள் திறந்த ஜீப் மூலமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் . அப்போது பேசிய சித்தராமையா, தென் மாநிலங்களில் பாஜகவால் பெரிய அளவுக்கு வளர்ச்சி பெற முடியவில்லை. ஆபரேஷன் கமலா மூலமாக பிற கட்சியினரை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சி அமைத்து வருகிறது பாஜக.
மக்கள் ஓட்டு போட்டு அந்தக் கட்சியால் தென்னிந்தியாவில் ஜெயிக்க முடியவில்லை. அதிமுகவுக்கு ஓட்டு போடுவது பாஜகவுக்கு ஓட்டு போடுவதற்கு சமம். எனவே பாஜக அதிமுக கூட்டணிக்கு மிகப்பெரிய தோல்வியை தமிழக மக்கள் பரிசாக அளிக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஏற்றத்தின் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமானால் திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வரவேண்டும். தமிழகத்தில் கருணாநிதி ஆட்சி காலத்தில் மிகச் சிறப்பாக நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டது.

பிரித்தாளும் அரசியல் மூலமாக பாஜக ஆட்சி நடத்த முயற்சி செய்கிறது. இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே வன்முறையைத் தூண்டிவிட்டு அதன் மூலமாக ஆட்சியைப் பிடிப்பது தான் அவர்கள் அஜெண்டா. 120 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை சந்திப்பதற்கு நரேந்திர மோடிக்கு நேரம் கிடையாது. ஆனால் அவர் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக அரசு நடத்தி வருகிறார் . இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications