தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பில் தனி கவனம் செலுத்தும் மோடி அரசு.. குவிந்த முதலீடுகள்.. அடடா!
சென்னை: கடந்த 10 வருடங்களில் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் இந்தியா அசாத்திய பாய்ச்சலை நிகழ்த்தி உள்ளது. 8 வழி சாலைகள் தொடங்கி பல்வேறு கட்டுமான திட்டங்கள் என்று மத்திய அரசு உள்கட்டமைப்பு வளர்ச்சியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
மத்திய அரசின் தொலைநோக்கு பார்வை, வேகம் மற்றும் பணி கலாச்சாரம் ஆகியவை நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்களில் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்லலாம். பசுமை புரட்சி, வெண்மை புரட்சி போல கடந்த 10 ஆண்டுகளை இந்தியாவின் உள்கட்டமைப்பு புரட்சி என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் வளர்ந்தால் அது வளர்ச்சி அல்ல வீக்கம் என்பார்கள். இதை உணர்ந்த மத்திய அரசு.. நாடு முழுக்க ஒரே மாதிரியான சமமான வளர்ச்சியை கொடுக்க தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டின் மீது மிக தீவிரமாக மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் பிரதமர் மோடி அரசு தமிழ்நாட்டிற்கு 10 லட்சம் கோடி ரூபாயை வளர்ச்சி பணிகளுக்காக ஒதுக்கி இமாலய சாதனை படைத்துள்ளது.
மத்திய அரசின் உள்கட்டமைப்பு திட்டங்களில் அதிகம் கவனிக்க வேண்டியது கிண்டி தொழில்நுட்ப பூங்கா. இதுபோன்ற தொழில் பகுதிகளை உருவாக்குவதன் மூலம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க எழுச்சியை பெற்றுள்ளது என்றால் மிகையாகாது.
தொழில் நிறுவங்களுக்கான மூல பொருட்களை உருவாக்குவதில் தொடங்கி மருத்துவ சேவை, மின்னணு பொருள் உற்பத்தி என்று இந்த கிண்டி தொழில்நுட்ப பூங்காவின் செயல்பாடுகள் நீண்டது. இந்த பூங்காவில்தான் ஐடி நிறுவனங்களும் இடம்பெற்று தமிழ்நாட்டின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றன. இங்கே எச்பி, வெரிசோன், சாம்சங், எஸ்கேபி இந்தியா, அசோக் லேலண்ட், விர்டுசா, ரெடிங்க்டன் இந்தியா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் அலுவலகங்களை திறந்துள்ளன.
மத்திய அரசின் முறையான திட்டமிடுதல்தான் இந்த முதலீடுகள் தமிழ்நாட்டை நோக்கி வர முக்கிய காரணம் ஆகும். தமிழ்நாட்டின் வளர்ச்சியில் 34% தொழிற்நிறுவனங்கள் மூலமாகவே வந்துள்ளது. இதன் காரணமாகவே தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பில் மத்திய அரசு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது . மஹிந்திரா உலக நகரம், அம்பத்தூர் பூங்கா, ஒரகடம் தொழிற்சாலை, இருங்காட்டுக்கோட்டை சிப்காட், ஸ்ரீபெரும்புதூர் தொழில் மண்டலம் ஆகியவைதான் தமிழ்நாட்டை தொழில்நுட்ப ரீதியாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றன. இவ்வளவு சிறப்பான தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பூங்காக்களை உருவாக்கி தொடர்ந்து சிறப்பாக நடத்தி வருவதன் காரணமாகவே உள்நாட்டு உற்பத்தியில் நாட்டிலேயே இரண்டாவது அதிக ஜிடிபி வைத்திருக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.
இதன் காரணமாகவே தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் மத்திய பாஜக அரசு கடந்த 10 வருடமாக அதிக சிரத்தை எடுத்து வருகிறது. பல்வேறு சாலை திட்டங்களை தமிழ்நாட்டிற்காக மத்திய அரசு அறிவித்ததன் காரணமும் இதுவே. இந்தியாவில் பயன்பாட்டிலுள்ள கார்களில் 30% கார்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கார்கள்.
சென்னையை சுற்றி இருக்கக்கூடிய பல தொழில் நகரங்களில் இருந்துதான் அசோக் லேலண்ட், பிஎம்டபிள்யூ, மஹிந்திரா, நிசான் மாதிரியான பல பன்னாட்டு நிறுவனங்களின் வாகனங்கள் உருவாக்கப்பட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆட்டோமொபைல் துறையை தாண்டி விண்வெளி, மருந்துகள், ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ், தோல் பொருட்கள் மற்றும் இரசாயனங்கள் உட்பட பலவகைப்பட்ட உற்பத்தித் துறைகள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு மாறி உள்ளதற்கு மத்திய அரசு செலுத்தும் சிறப்பு கவனமும் ஒரு காரணம். இதை கருத்தில் கொண்டே தமிழ்நாட்டில் சாலை இணைப்பை மேம்படுத்திட பாரத்மாலா போன்ற மத்திய அரசின் திட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இந்த திட்டம் தவிர கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பாதுகாப்பு தொழில்துறை தாழ்வாரம், பிஎம்- மித்ரா மெகா ஜவுளி பூங்கா, மல்டிமாடல் தளவாட பூங்கா போன்றவை மத்திய அரசால் தமிழ்நாட்டிற்கு தொடங்கப்பட்ட முக்கிய திட்டங்கள் ஆகும்.
2009 முதல் 2014 வரை தமிழ்நாடு ரயில்வே துறைக்கு ரூ.900 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில் 2023ம் ஆண்டு மட்டும் மோடி அரசு தமிழ்நாட்டில் ரயில்வே சார்ந்து ரூ.6000 கோடியை ஒதுக்கியுள்ளது. அந்த அளவிற்கு தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீடு புதிய உயரத்தை அடைந்துள்ளது. தவிர இந்திய ரயில்வேயின் அடுத்தகட்ட பாய்ச்சலான வந்தே பாரத் ரயில் தயாரிப்பு சென்னையில் உள்ள ஐசிஎஃப்பில்தான் தயாரிக்கப்படுகிறது.
2024 ஜனவரியில், தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டின் முன்னேற்றத்துடன் இந்தியாவும் முன்னேறும் என்றார். ஏற்றுமதி, நெடுஞ்சாலைகள், தளவாடங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் பொது உள்கட்டமைப்பு ஆகியவற்றில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதால், இம்மாநிலத்தின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. பல வளங்கள் நிறைந்த தமிழ்நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல தொடர்ந்து உள்கட்டமைப்பு ரீதியாக மத்திய பாஜக அரசு பல்வேறு முதலீடுகளை தமிழ்நாட்டில் செய்ய தொடங்கி உள்ளது .












Click it and Unblock the Notifications