அட.. தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மகன் பிறந்தநாளுக்கு வரலியாம்.. 4 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட்!
ஐதராபாத்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகனும், அமைச்சருமான கேடி ராமராவின் பிறந்தநாளில் பங்கேற்காத 4 அரசு ஊழியர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்ட்டிரிய ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இந்த கட்சியின் நிறுவன தலைவரான சந்திரசேகரராவ் முதல்வராக உள்ளார்.
இவரது மகன் கேடி ராமராவ் அமைச்சராக உள்ளார். இவர் நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்புற மேம்பாடு, தொழில் துறை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.

பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்நிலையில் இவரது பிறந்தநாள் ஜூலை 24 ஆகும். இவரது பிறந்தநாளை கட்சி தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்நிலையில் தான் தற்போது தெலங்கானாவில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என அவர் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இருப்பினும் பல இடங்களில் அவரது பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

பங்கேற்காத 4 ஊழியர்கள்
இதேபோல் பெல்லம்பள்ளி நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பெல்லம்பள்ளி அரசு மருத்துவமனையில் அமைச்சர் கேடி ராமராவின் பிறந்தநாள் ஜூலை 24ல் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அனைத்து ஊழியர்களும் பங்கேற்க வேண்டும் என வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் விழாவில் 4 ஊழியர்கள்பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

விளக்கம் கேட்டு நோட்டீஸ்
இதையடுத்து நகராட்சி கமிஷனர் 4 பேருக்கும் விளக்கம் கேட்டு ஜூலை 25ல் நோட்டீஸ் அனுப்பினார். அதில், ‛‛அமைச்சர் ராமராவின் பிறந்தநாள் விழா 24.07.2022 அன்று பெல்லம்பள்ளி அரசு மருத்துவமனையில் காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. அலுவலக ஊழியர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதனை புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது. இதுதொடர்பாக 24 மணிநேரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என கூறப்பட்டு இருந்தது.

4 பேரும் சஸ்பெண்ட்
இந்நிலையில் தான் பிறந்தநாள் விழாவில் பங்கேற்காத 4 ஊழியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சீனியர் உதவியாளர் ராஜேஸ்வரி, ஜூனியர் அசிஸ்டெண்ட் பூணம் சந்தர், சிஸ்டம் மேஜேனர் மோகன் உள்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அவர்கள் 4 பேரும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

பாஜக விமர்சனம்
மேலும், இந்த நடவடிக்கையை பாஜக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இதுதொடர்பாக பாஜகவின் ஐடி விங்க் தலைவர் அமித் மாளவியா, "ஜூலை 24 ல் தெலங்கானா இளவரசர் கே.டி.ஆரின் பிறந்தநாள் விழாவில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதை விளக்கும்படி அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தெலங்கானாவில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு உள்ள முடியாட்சியாக உள்ளதை காட்டுகிறது'' என விமர்சனம் செய்திருந்தார்.












Click it and Unblock the Notifications