காலைல 8.30 மணியாச்சுனா போதும்.. 52 வினாடிகளுக்கு ஆடாமல் அசையாமல் நிற்கும் நலகொண்டா நகர மக்கள்
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் நலகொண்டா நகரத்தில் 8.30 மணியாகிவிட்டால் போதும் அந்த நகர மக்கள் எந்த வேலையாக இருந்தாலும் விட்டுவிட்டு 52 வினாடிகளுக்கு நிற்கும் சம்பவம் தினந்தோறும் நடைபெறுகிறது.
ஜாதி, மதம், இனம், மொழி கடந்து ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக கல்வி நிறுவனங்களில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வருகிறது. இந்த கீதம் இசைக்கப்படும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும்.
அது போல் குடியரசு தின விழா, சுதந்திர தின விழா, அரசு விழாக்கள், பள்ளி, கல்லூரி விழாக்களின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்படும். சினிமா தியேட்டர்களிலும் தற்போது படம் தொடங்குவதற்கு முன்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வருகிறது. இதற்கு அனைவரும் எழுந்து நிற்பர்.

இசைக்கப்படும் தேசிய கீதம்
தேசிய கீதம் இசைத்தால் எந்த செயலாக இருந்தாலும் அதை விட்டுவிட்டு ஆடாமல் அசையாமல் நிற்க வேண்டும். அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் ஒரு நகரத்தில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது யார் எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும் ஆடாமல் அசையாமல் நிற்கும் வழக்கத்தை கடைப்பிடித்து வருகிறார்கள்.

புதிய முயற்சி
தெலுங்கானாவின் நலகொண்டா நகரில்தான் இந்த சம்பவம் தினந்தோறும் நடைபெறுகிறது. கடந்த ஜனவரி 23 ஆம் தேதி முதல் இந்த நடைமுறையை மக்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். ஜன கன மன உத்சவ சமிதியின் தலைவர் கார்நாட்டி விஜய் குமாரும் அவரது நண்பர்களும் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளனர்.

12 முக்கிய சந்திப்புகள்
தினந்தோறும் காலை 8.30 மணிக்கு நலகொண்டாவில் உள்ள 12 முக்கிய சந்திப்புகளில் தேசிய கீதம் இசைக்கப்படும். அப்போது சுமார் 52 வினாடிகளுக்கு மக்கள் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தாலும் சரி, சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் சரி, எந்த வேலையாக இருந்தாலும் நிறுத்திவிட்டு தேசிய கீதத்திற்கு உரிய மரியாதையை கொடுத்து வருகிறார்கள்.

125 ஆவது
இந்த தேசிய கீதம் இசைத்தவுடன் தேசப்பற்றுடன் வயதானவர்களும் முதியவர்களும் ஆடாமல் அசையாமல் எழுந்து நிற்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. நாளடைவில் நலகொண்டாவில் உள்ள சிறிய சிறிய பகுதிகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி கடந்த 23 ஆம் தேதியே குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் தொடங்கின.

நலகொண்டா
இந்த விழா முப்படைகளும் பாசறைக்கு திரும்பும் நிகழ்வுடன் நேற்றைய தினம் முடிவடைந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு லடாக்கில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் இந்தியா- சீனா இடையே நிகழ்ந்த மோதலில் வீரமரணமடைந்த கலோனல் சந்தோஷ் பாபு, தெலுங்கானாவின் நலகொண்டாவில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications