அல்லு அர்ஜுன் கைதானது எனக்கு தெரியாது! என் மனைவி இறந்ததற்கு அவர் என்ன செய்வார்? ரேவதி கணவர் பேட்டி
ஹைதராபாத்: என் மனைவி இறந்ததற்கு அல்லு அர்ஜுன் என்ன செய்வார். நான் புகாரை வாபஸ் பெறவும் தயாராக இருக்கிறேன் என தியேட்டரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரேவதியின் கணவர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியானது. இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 6 நாட்களில் இந்த படம் ரூ 1000 கோடிக்கு மேல் லாபம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி ஹைதராபாத் சிக்கடப்பள்ளியில் உள்ள சந்தியா தியேட்டரில் இரவு 9.30 மணிக்கு புஷ்பா 2 பிரீமியர் காட்சி போடப்பட்டது. இதை காண குடும்பத்துடன் ரேவதி என்ற பெண் , தனது கணவர், இரு குழந்தைகளுடன் சென்றார்.
இந்த நிலையில் இந்த தியேட்டருக்கு சர்பிரைஸ் விசிட்டாக அல்லு அர்ஜுன் வந்திருந்தார். இதனால் திக்குமுக்காடிய ரசிகர்கள் அவரை பார்க்க முண்டியடித்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்ற 35 வயது பெண் கூட்டத்தில் சிக்கி மயங்கினார்.
உடனே அங்கிருந்த போலீஸார் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார். இவருடைய மகனும் மயங்கிய நிலையில் அவர் தீவிர சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார். இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ரேவதியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் அல்லு அர்ஜுன், தியேட்டர் நிர்வாகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எனினும் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் வழங்குவதாக அல்லு அர்ஜுன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ரேவதி உயிரிழந்தது தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுனை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவருடைய கைதுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அல்லு அர்ஜுன் நீதிமன்றத்தை நாடினார். இதனிடையே நடிகர் அல்லு அர்ஜுனை 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இவருக்கு இடைக்கால ஜாமீன் கிடைத்ததை அடுத்து அவர் விடுதலைச் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இவருடைய ஜாமீன் தொடர்பான ஆவணங்கள் தாமதமானதால் அவர் நேற்று இரவு சிறையில் கழிக்க நேரிட்டது. இந்த சம்பவம் குறித்து ரேவதியின் கணவர் பாஸ்கர் கூறியதாவது: என் மனைவி கூட்ட நெரிசலில் சிக்கி இறந்ததற்கு அல்லு அர்ஜுன் என்ன செய்வார், அவருக்கும் என் மனைவி இறப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை.
அவர் கைது செய்யப்பட்டது கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அவர் வெளியே வர நான் வழக்கை வாபஸ் பெறவும் தயாராக இருக்கிறேன் என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications