ஜாமீன் கிடைத்தும் ரிலீஸ் இல்லை.. நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தயாரான கிளாஸ்- 1 செல்.. என்ன நடக்கிறது?
ஹைதராபாத்: புஷ்பா 2 சிறப்பு திரையிடலில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார். ஆனாலும், சில மணி நேரத்திலேயே அவருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனால் அவர் சிறையில் இருந்து விடுதலையாவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், ஜாமீன் தொடர்பான நீதிமன்ற ஆவணங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் அல்லு அர்ஜுன் இன்று சிறையிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
புஷ்பா 2 திரைப்படம் இந்த மாத தொடக்கத்தில் வெளியானது. பட ரிலீசுக்கு முன்னதாக ஹைதராபாத்தில் பல இடங்களில் சிறப்பு திரையிடல் நடைபெற்றது.

ஜாமீன்: அதன்படி அங்குள்ள சந்தியா தியேட்டரில் ஸ்பெஷல் ஷோ போடப்பட்ட நிலையில், அங்கு அல்லு அர்ஜுன் சென்றார். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில், அதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் ஹைதராபாத் போலீசார் அல்லு அர்ஜுனை இன்று கைது செய்தனர். அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க கீழமை நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், உயர் நீதிமன்றம் அவருக்கு 4 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது
ரிலீஸ் இல்லை: இருந்த போதிலும் நடிகர் அல்லு அர்ஜுன் இதுவரை சிறையில் இருந்து விடுவிக்கப்படவில்லை. ஜாமீன் தொடர்பான ஆவணங்கள் வரத் தாமதம் ஆகியிருப்பதால் அவரை விடுவிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் இன்றைய தினம் அவர் சஞ்சல்குடாவில் உள்ள மத்தியச் சிறையிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகச் சிறையைச் சுற்றிலும் மிகவும் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் இருந்து தங்களுக்குத் தேவையான ஜாமீன் ஆவணங்கள் இன்னும் வரவில்லை என்று சிறை அதிகாரிகள் அல்லு அர்ஜுன் தரப்பு வழக்கறிஞர்களிடம் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
அதற்கு முன்னதாகவே அல்லு அர்ஜுன் தரப்பு வழக்கறிஞர்கள் இடைக்கால பிணை தொடர்பான ஆவணங்களைச் சிறையில் சமர்ப்பித்தனர். இருப்பினும், அது வடிவத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை எனச் சொல்லி அதை ஏற்கச் சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
என்ன காரணம்: அதாவது உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கிய போதிலும், சில ஆவணங்கள் உள்ளிட்ட பிணை சார்ந்த சில பணிகள் முடிவடையவில்லை. இதன் காரணமாகவே அல்லு அர்ஜுன் இன்னும் சிறையில் இருக்கிறார். தேவையான ஜாமீன் ஆவணங்கள் கிடைத்ததும், அவரை விடுவிக்கத் தயாராக இருப்பதாகச் சிறை அதிகாரிகள் கூறியதாகவும் தெரிகிறது.
சிறை தயார்: இது ஒரு பக்கம் இருக்க ஒரு வேலை ஜாமீன் ஆவணங்கள் வரத் தாமதம் ஆனால் அல்லு அர்ஜுன் சிறையிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இதனால் அவரை தங்க வைக்க கிளாஸ்- 1 பேரக் சிறையை ஜெயில் அதிகாரிகள் தயார் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரம் அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் சிறைக்கு அருகே குவிந்துள்ளனர். அவர்கள் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாகத் தொடர்ந்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் அங்கு மிகவும் பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications