ஆடு என நினைத்து.. ஆட்டை பிடித்திருந்த நபரின் தலையில் ஒரே "வெட்டு".. மது போதையில் நடந்த விபரீதம்
ஹைதராபாத்: ஆந்திரா மாநிலத்தில் குடிபோதையில் ஆடு பலியிட்ட ஒருவர் செய்த செயல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல் தற்போது வெளியாகியுள்ளது
பொதுவாகக் கோயில்களில் நடைபெறும் விழாக்களில் ஆடு, கோழி பலியிடப்படும். இதற்காகக் கோயில்களில் தனியாக இடங்களும் அமைக்கப்பட்டிருக்கும்.
இந்நிலையில், ஆந்திரா மாநிலத்தில் ஆட்டை பலி கொடுக்கும் நிகழ்வில் நடந்த ஒரு சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிசயமாக இருக்கே.. தமிழகத்தில் கடந்த ஆண்டை விட.. புத்தாண்டு மது விற்பனை குறைவாம்.. இதுதான் காரணம்
சங்கராந்தி
தமிழ்நாட்டில் எப்படிப் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறதோ, அதேபோல பல மாநிலங்களிலும் இப்போது பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதன்படி அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசம் முழுவதும் சங்கராந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த சங்கராந்தி விழா மாநிலம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படும். சித்தூர் மாவட்டத்தில் இந்த கொண்டாட்ட நாள் தான் திடீரென துக்க நாளாக மாறியுள்ளது,
நேர்த்திக்கடன் நிகழ்ச்சி
ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வலசப்பள்ளி என்ற ஊரில் ஒவ்வொரு ஆண்டும் சங்கராந்தியை முன்னிட்டு ஊர் எல்லையில் உள்ள எல்லம்மா கோவிலில் நேர்த்திக்கடன் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். நள்ளிரவு நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் கோயிலில் ஒன்றுகூடி கடவுளுக்கு ஆடு, கோழி உள்ளிட்ட விலங்குகள் பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதேபோல இந்த ஆண்டும் விலங்குகளை நேர்த்திக்கடன் செலுத்த பொதுமக்கள் அங்கு ஒன்று கூடினர்.
மதுபோதை
அப்போது கடவுளுக்குப் பலி கொடுக்க ஆடுகள் தயார் நிலையில் இருந்தது. அங்கு ஆடு வெட்டும் இடத்தில் 35 வயதான சுரேஷ் என்பவர் ஆட்டை பிடித்துக் கொண்டிருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சலபதி என்பவர் ஆடுகளை பலி கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது சலபதி நல்ல மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நள்ளிரவில் நடந்த ஆட்டை பலி கொடுக்கும் நிகழ்வில் போதையில் இருந்த சலபதி ஆடு என்று நினைத்து ஆட்டை பிடித்துக்கொண்டிருந்த சுரேஷின் தலையை ஓங்கி வெட்டியுள்ளார்.
பரபரப்பு
இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் அங்கேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தபடி சரிந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் சுரேசை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
போலீஸ் விசாரணை
இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட சுரேஷுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். உண்மையாகவே இது மதுபோதையில் தவறுதலாக நடந்த சம்பவம் தானா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். மதுபோதையில் ஆடு என்று நினைத்து ஆட்டை பிடித்துக்கொண்டிருந்த நபரின் தலை வெட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.