"90 கிட்ஸ் சாபம் சும்மா விடாது" ஒரே நேரத்தில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்! கலாய்த்த நெட்டிசன்ஸ்
ஐதராபாத்: வாழ்க்கையில் நமக்கு எல்லாம் திருமணம் ஆகிவிடுமா என்று 90ஸ் கிட்ஸ்கள் பரிதவிக்கும் நிலையில், தெலுங்கானாவில் ஒருவர் காத்துவாக்குல இரண்டு காதல் என்ற படத்தை போல் இரு பெண்களுக்கு ஒரே நேரத்தில் தாலி கட்டிய சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. #TwoBridesOneGroom என்ற ஹேஷ்டேக்குடன் டிரெண்ட் ஆகி வரும் நிலையில் இதற்கு ஜாலியாக நெட்டிசன்களும் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.
தெலுங்கானாவில் ஒரே நேரத்தில் 2 பெண்களை காதலித்து வந்த இளைஞர், பெற்றோர் சம்மதத்துடன் ஒரே மேடையில் வைத்து 2 பெண்களுக்கும் தாலி கட்டிய சம்பவம் நடைபெற்றுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி நடித்த காத்து வாக்குல இரண்டு காதல் படத்தில் நயன்தாராவும், சமந்தாவும் கதாநாயகனை ஒரே நேரத்தில் காதலிப்பார்கள். இந்த படத்தை போலத்தான் தெலுங்கானா இளைஞரின் வாழ்க்கையிலும் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

இரண்டு பெண்களை காதலித்த நபர்
தெலுங்கானாவில் குராம்பீம் ஆசிபாபாத் என்ற மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள கும்னூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சூரியதேவ். ஹைதராபாத்தில் சினிமா சம்பந்தப்பட்ட தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரது பக்கத்து ஊரை சேர்ந்த கனகா லால் என்பவர் காதலித்து வந்தார். 3 ஆண்டுகளாக இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். ஆனால் இருவருக்கும் இடையே திடீரென சண்டை வந்து இந்த ஜோடி பிரிந்து விட்டது.
இதனால், மனம் நொந்து இருந்த சூரியதேவ், ஜல்கர் தேவி என்ற மற்றொரு பெண் மீது காதலில் விழுந்தார். இதையடுத்து, இந்த காதல் ஜோடி உல்லாசமாக சுற்றி திரிந்த நிலையில், பிரிந்து சென்ற முதல் காதலியான கனகா லால், மீண்டும் சூரிய தேவ்வை விரும்புவதாக கூறினார். இதனால் என்ன செய்வது என்று தவித்த சூரிய தேவ், இரண்டு பேரையும் காதலிக்க தொடங்கினார்.
இருவீட்டு பெண்ணின் பெற்றோரும் சம்மதம்
கொஞ்ச நாளைக்கு இரண்டு பேருக்கும் தெரியாமல் மூடி மறைத்த சூரியதேவிற்கு நீண்ட நாள், இதை தொடர முடியவில்லை. ஒரு கட்டத்தில் சூர்யதேவின் லீலைகள் இரண்டு பெண்களுக்கும் தெரிந்தது. இதனால் கோபம் அடைந்த இருவரும் சூர்ய தேவ் சட்டையை பிடித்து கேட்டு இருக்கிறார்கள். ஆனால் இருவரையுமே உயிருக்கு உயிராய் காதலிப்பதாக சூர்யதேவ் சொன்ன நிலையில், காதலன் மீதான அதீத அன்பால், இரண்டு காதலிகளுமே அவரை கல்யாணம் செய்ய விருப்பம் தெரிவித்தனர்.
ஆனால், இரண்டு பேரை எப்படி திருமணம் செய்யலாம் என பெண்களின் பெற்றோர்களும், சூர்யதேவின் பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். அவர்களை எப்படியோ சூர்ய தேவ் சமாளித்து சரி கட்டினார். இதையடுத்து திருமண ஏற்பாடுகள் தடல் புடலாக நடைபெற்றது. மணமகன் சூர்யதேவ் மணமகளின் பெயர்களை திருமண கார்டில் அச்சடித்து தனது நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் கொடுத்தனர்.
90 கிட்ஸ் சாபம் சும்மா விடாது
திருமண வீட்டில், மாப்பிள்ளையின் நண்பர்களும் பிரமாண்ட பேனர்கள் அடித்து இரண்டு பெண்களின் படத்துடன் திருமண வீட்டருகே வைத்துவிட்டனர். உற்றார், உறவினர்கள் புடைசூழ ஒரே மண மேடையில் இரு பெண்களுக்க்கும் சூர்ய தேவ் மங்கள வாத்தியங்கள் முழங்க தாலி கட்டினார். பின்னர் வந்த விருந்தினர்களுக்கு உணவு விருந்து உபசரிப்பும் அளிக்கப்பட்டது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#TwoBridesOneGroom என்ற ஹேஷ்டேக்குடன் இந்த சம்பவம் வைரலாகியுள்ளது. ஒரே மேடையில் எப்படி இரண்டு பெண்களுக்கு தாலி கட்ட முடியும். இது இந்து திருமண சட்டப்படி விதிகளுக்க்கு எதிரானது இல்லையா? என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்களோ தங்களுக்கே உரிய பாணியில் ஜாலியாக கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். உங்களை எல்லாம் 90 கிட்ஸ் சாபம் சும்மா விடாது என கலாய்த்தும் பதிவிட்டு இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications